பதிவு செய்த நாள்
19 நவ2013
00:30
புதுடில்லி: இந்திய அஞ்சல் துறை, நாடு முழுவதும் உள்ள அதன் அஞ்சலகங்களில், தங்க காசுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுஉள்ளது. தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அஞ்சல் துறை, தங்க காசுகள் சப்ளைக்கான ஒப்பந்த புள்ளியை கோரியுள்ளது.
பெரும் சர்ச்சை:பொதுத் துறை வங்கிகள் தங்க காசுகள் மற்றும் பதக்கங்களை விற்பனை செய்ய மத்திய நிதி அமைச்சகம் தடை விதித்துள்ளது.இந்நிலையில், மத்திய அரசின் ஓர் அங்கமான, தேசிய அஞ்சல் துறை, தங்க காசுகளை விற்பனை செய்ய இருப்பது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இதன் மூலம், மத்திய அரசின் இரு அமைச்சகங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.சென்ற 2012–13ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக் குறை, 8,800 கோடி டாலராக அதிகரித்தது. இதற்கு, 5,800 கோடி டாலர் மதிப்பிலான, 850 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதும் ஒரு காரணம் என, நிதியமைச்சகம் கருதியது.ஆகவே, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
முக்கியமாக, தங்கம் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதமாகவும், ஆபரணங்களுக்கான சுங்க வரி, 15 சதவீதமாகவும் அதிகரிக்கப் பட்டது.மேலும், இறக்குமதியாகும் தங்கத்தில், 20 சதவீதம், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.இத்துடன், பொதுத்துறை வங்கிகள், தங்க காசுகள், பதக்கங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கும், ரிசர்வ் வங்கி, தடை விதித்தது.இது போன்ற நடவடிக்கைகளால், தங்கம் இறக்குமதி, வெகுவாக குறைந்துள்ளது.சென்ற மே மாதம், 162 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.
இறக்குமதி:மத்திய அரசின் நடவடிக்கைகளால், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், தங்கம் இறக்குமதி, முறையே, 47.75 டன், 3.38 டன், 11.16 டன் மற்றும் 23.5 டன் என்ற அளவில் குறைந்துள்ளது.
இதையடுத்து, நடப்பு நிதிஆண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, இலக்கை ( 7,000 கோடி டாலர்) விட, 1,000 கோடி டாலர் குறைந்து, 6,000 கோடி டாலராக சரிவடையும் என, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.ஆனால், நிதியமைச்சர் கூறியதை விட, நடப்பு கணக்கு பற்றாக்குறை, மேலும் 400 கோடி டாலர் குறைந்து, 5,600 கோடி டாலராக வீழ்ச்சி காணும் என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், அண்மையில் கூறினர்.
ஒப்பந்த புள்ளி:இவர்களின் நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில், தங்க காசுகள் சப்ளைக்காக, அஞ்சல் துறை, கடந்த 6ம் தேதி வெளியிட்டுள்ள ஒப்பந்த புள்ளி அமைந்துள்ளது. வரும் 27ம் தேதி வரை, வர்த்தகர்கள், ஒப்பந்த புள்ளி கோரி விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இணையதள பயன்பாடு அதிகரித்த பின்னர், அஞ்சல் அட்டை, தந்தி, மணியார்டர் உள்ளிட்டவற்றின் வாயிலான வருவாயை, தேசிய அஞ்சல் துறை இழந்து விட்டது.வருவாய் பெருக்கம்தற்போது, கட்டண சேவைகளையே இலக்காக கொண்டு செயல்படும் தேசிய அஞ்சல் துறை, அதன் வருவாயை பெருக்கும் நோக்குடன், தங்க காசுகள் விற்பனையில் இறங்க உள்ளது. இதற்கு, நிதியமைச்சகம் இடமளிக்குமா, இல்லையா என்பது விரைவில் தெரிந்து விடும்.அஞ்சல் துறை, வங்கித் துறையில் கால் பதிக்கவும் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமருக்கு கடிதம்:‘‘தங்க காசுகளை விற்க, பொதுத் துறை வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அஞ்சல் துறைக்கு மட்டும் அனுமதி வழங்கியது எப்படி?’’, என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் எஸ். சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, விளக்கம் அளிக்குமாறு அவர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|