பதிவு செய்த நாள்
10 டிச2013
03:03
புதுடில்லி: 'கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, வங்கி துவங்கும் உரிமையை ரிசர்வ் வங்கி வழங்கக் கூடாது' என, பார்லிமென்ட் நிலைக்குழு தெரிவித்து உள்ளது.இது குறித்து, இக்குழு, லோக்சபாவில் தாக்கல் செய்துள்ள அறிக்கை விவரம்:புதிய வங்கி துவங்க, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க கூடாது.விதிமுறைகள்இந்திய வங்கித் துறை, பொதுமக்களின் பணம் மற்றும் அவர்களின் நலனில் அக்கறையுள்ள, மிகப் பெரிய வர்த்தகத்தை கொண்டதாக விளங்குகிறது.அதனால், வங்கித் துறையையும், தொழில்துறையையும் தனித் தனியாக வைத்திருப்பதே நல்லது என, குழு கருதுகிறது.
பெரிய நிறுவனங்கள் துவக்கும் வங்கிகள், அவற்றின் முதலாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதை தடுக்க, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் எந்த அளவிற்கு உதவும் என, தெரியவில்லை.முன்னுரிமை துறைகளுக்கு தாராள கடன், குக்கிராமங்களுக்கும் வங்கி வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேசிய வங்கிக் கொள்கையாக உள்ளன.
ஆனால், சென்ற 2012–13ம் நிதியாண்டு நிலவரப்படி, தனியார் துறை வங்கி கிளைகளில், 17 சதவீதம் மட்டுமே கிராமப்புறங்களில் துவங்கப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், கார்ப்பரேட் நிறுவனங்களின் புதிய வங்கிகளாலும், மேற்கண்ட தேசிய வங்கிக் கொள்கையின் சாராம்சங்களை நிறைவேற்ற இயலாது.வங்கிகள், நகர்புறத்தில் திறக்கும் ஒவ்வொரு மூன்று கிளைகளுக்கும், தலா ஒரு கிளை வீதம், கிராமப்புறத்தில் அமைக்க வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்ய வேண்டும்.புதிய வங்கி துவங்க, குறைந்தபட்சமாக, 500 கோடி ரூபாய் மூலதனம்தேவை என்ற விதிமுறையை, 1,000கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.இதனால், மேம்போக்காக வங்கித் துறையில் கால் பதிக்க விரும்பும் நிறுவனங்களின் வருகை குறையும்.வங்கிச் சேவை அதிக அளவில் பரவலாக இல்லாத ஒரு நாட்டில், வங்கிக் கிளைகள் ஒருங்கிணைப்பு, வங்கி கிளைக்கான இடம், பணியாளர் தேர்வு என, பல்வேறு செலவினங்கள் உள்ளன.
மூலதனம்அதனால், புதிய வங்கிகள், குறைந்தபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள, 500 கோடி ரூபாய் மூலதனத்தில், ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவது கடினம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில், புதிய வங்கி உரிமத்திற்காக விண்ணப்பித்ததை டாட்டா சன்ஸ் திரும்பப் பெற்றது. இதைத் தொடர்ந்து மேலும் பல நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் கடுமையான விதிமுறை காரணமாக, புதிய வங்கி துவங்கும் திட்டத்தை கைவிட உள்ளதாக கூறப்படுகிறது.வரும், 2014ம் ஆண்டு ஜனவரியில், புதிய வங்கி உரிமம் கோரி வந்த விண்ணப்பங்கள் தொடர்பாக, ரிசர்வ் வங்கி, இறுதி முடிவெடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|