பதிவு செய்த நாள்
17 டிச2013
00:27
புதுடில்லி: தங்கம் இறக்குமதி மீதுள்ள கடும் கட்டுப்பாடுகள் படிப்படி யாக குறைய வாய்ப்புள்ளது என, ஆய்வாளர்களும், சந்தையாளர்களும் தெரிவித்துள்ளனர்.நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்ததையடுத்தும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடுமையாக சரிவடைந்ததையடுத்தும், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்ததுடன், சுங்க வரியையும் அதிகரித்தன.நடப்பு கணக்கு பற்றாக்குறைஇதனால், தங்கம் உள்ளிட்ட மதிப்பு மிகு உலோகங்களின் இறக்குமதி சரிவடைந்ததுடன், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் கணிசமாக குறைந்துள்ளது.ரூபாயின் மதிப்பும் உயரத் துவங்கியுள்ளது.
குறிப்பாக, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத அளவிற்கு, 68.81ஆக மிகவும் சரிவடைந்துஇருந்தது. இது, தற்போது, 10 சதவீதத்திற்கும் மேல் வலுவடைந்து, 61.75 ஆக உயர்ந்துள்ளது.மேலும், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது. இது போன்ற காரணங்களால், தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக குறைக்கப்படும் என, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இது குறித்து, நடப்பு மாத இறுதியில் நடைபெற உள்ள மத்திய உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என, தெரியவந்துள்ளது.
கடந்த 2012–13ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), 4.8 சதவீதம் அல்லது 8,800 கோடி டாலராக அதிகரித்தது.அவ்வாண்டில், நாட்டின் மொத்த இறக்குமதியில், தங்கம் இறக்குமதிக்காக, 5,680 கோடி டாலர் செலவிடப்பட்டுஉள்ளது. இதனால், நாட்டின் அன்னியச் செலாவணி அதிகளவில் வெளியேறியது.தங்கம் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் மீதான இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் இறக்குமதி, 2,550 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.இறக்குமதி வரிஇது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 3,350 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது. சென்ற நவம்பர் மாதத்தில் மட்டும், இவற்றின் இறக்குமதி மதிப்பு, 120 கோடி டாலராக மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.இந்நிலையில், நடப்பு 2013–14ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 6,000 கோடி டாலராக குறையும் என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர், ரகுராம் ராஜன், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 5,600 கோடி டாலராக குறைய வாய்ப்புஉள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கிட்டத்தட்ட 3 சதவீதமாகும்.நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் வகையில், மத்திய அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளில், தங்கம் மீதான இறக்குமதி வரியை, 2 சதவீதத்திலிருந்து, 10 சதவீதமாக அதிகரித்தது. மேலும், தங்க ஆபரணங்கள் மீதான இறக்குமதி வரி, 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
ரிசர்வ் வங்கிஇச்சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி, தங்க காசுகள், தங்கப் பதக்கங்கள் போன்றவற்றின் இறக்குமதிக்கு தடைவிதித்ததுடன், இறக்குமதி செய்யப்படும், தங்கத்தில், 20 சதவீதம் மறு ஏற்றுமதி செய்யப்படும் வகையில், வர்த்தகர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவித்தது.தங்கம் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளால், தங்கம் கடத்தல் அதிகரித்துள்ளதுடன், அரசுக்கும் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது, நிலைமைகள் சாதகமாக மாறி உள்ளதுடன், நடப்பு நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் கணிசமாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.எனவே, மத்திய அரசு, தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடு களை தளர்வு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|