பதிவு செய்த நாள்
20 டிச2013
00:15
தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க, மத்திய அரசு, முடிவு செய்துள்ளது. இதனால், தங்க ஆபரணங்கள் விலை மேலும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரித்ததால், நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்தது.
இதை கட்டுப்படுத்த, தங்கம் மீதான இறக்குமதி வரியை, மத்திய அரசு, உயர்த்தியது. இதனால், தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கம் வாங்குவதை குறைத்தனர்.தற்போது, நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது. இதையடுத்து, தங்கம் மீதான இறக்குமதி வரியை, 10 சதவீதத்தில் இருந்து குறைக்க, மத்திய அரசு, பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், கடந்த வாரம் முதல், ஆபரண தங்கம் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,796 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,368 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,900 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில் நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 14 ரூபாய் குறைந்து, 2,782 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 112 ரூபாய் சரிவடைந்து, 22,256 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 150 ரூபாய் குறைந்து, 29,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் வெள்ளி, 46.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 43,225 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த, இரு தினங்களில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 27 ரூபாயும், சவரனுக்கு, 216 ரூபாயும் சரிவடைந்து உள்ளது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், 'சர்வதேச அளவில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 25 டாலர் வரை குறைந்துள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பும் வலுவடைந்து வருகிறது. இதனால், தங்கம் விலை குறைந்துள்ளது' என்றார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|