பதிவு செய்த நாள்
27 டிச2013
01:57
மும்பை:சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள நிறுவனங்கள், தங்க நகைகள், நவரத்தினக் கற்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய தடை விதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
சுங்க வரி:நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், சுங்க வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.இதன் விளைவாக, தங்கம் இறக்குமதியும், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது.
அதே சமயம், சட்டத்திற்கு புறம்பாக தங்கம் கடத்துவது அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாட்டின் முக்கிய விமான நிலையங்கள், துறைமுகங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனால், இதுவரை இல்லாத அளவிற்கு, நடப்பாண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது.
சிறப்பு மண்டலங்கள்:இது போன்ற கடும் நடவடிக்கைகளுக்கு இடையிலும், அரசை ஏமாற்றி புதுப் புது வழிகளில் உள்நாட்டிற்கு தங்கம் வந்து கொண்டுதான் உள்ளது.சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்கள், கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உள்ள வைரங்கள், 4,500 கோடி ரூபாய் மதிப்புள்ள நவரத்தினக் கற்கள், 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் ஆகியவற்றை இறக்குமதி செய்துள்ளன.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக, மறு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். ஆனால், அவற்றில் குறிப்பிடத்தக்க அளவிற்கு, உள்நாட்டு பயன்பாட்டிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது என்பதை, மத்திய வர்த்தக அமைச்சகம் கண்டுபிடித்துள்ளது.
சூரத்:குறிப்பாக, சூரத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களை சேர்ந்த பல நிறுவனங்கள், உற்பத்திக்கு பதிலாக, தங்கம், முத்து, வைரம் உள்ளிட்டவற்றின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துஉள்ளது.இந்த மண்டலங்களுக்கு இறக்குமதி வரிச் சலுகை வழங்கப்படுகிறது.
இதை பயன்படுத்தி, தங்கம் இறக்குமதிக்கான சுங்கம் மற்றும் உற்பத்தி வரி (11 சதவீதம்) வாயிலாக, பல நிறுவனங்கள் லாபமீட்டியுள்ளன. இதையடுத்து, இந்நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் உண்மையான மதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கான சாதனங்களை நிறுவ, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சோதனை:மேலும், சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஆணையர்களுக்கு, அங்குள்ள நகைகள் மற்றும் நவரத்தினக் கற்கள் துறை சார்ந்த நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து, சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்கள், நகைகள் மற்றும் நவரத்தினங்கள் இறக்குமதி செய்ய தடை விதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|