பதிவு செய்த நாள்
29 டிச2013
03:13
சேலம்:கடந்த ஒரு மாதமாக, தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லாததால், தங்க நகைகளின் விற்பனை அதிகரித்து வருகிறது.கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், தங்கத்தின் விலையில், ஏற்றம் காணப்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால், தங்கத்தின் விலையில் ஏற்றம் இருந்தது. தற்போது, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதால், தங்கத்தின் விலையில், சற்று இறக்கம் ஏற்பட்டுள்ளது.சென்னை:கடந்த ஒரு மாதமாக, ஒரு கிராம் தங்கத்தின் விலை, 2,780 – 2,790 ரூபாய் என்ற அளவிற்கே இருக்கிறது.ஒரு சவரன் தங்கம், 22,200 முதல் 23 ஆயிரம் ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது.நேற்று முன்தினம், சென்னையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கம், 2,782 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம், 22,256 ரூபாயாகவும் இருந்தது. இவை, நேற்று, முறையே, 2,787 மற்றும் 22,296 ரூபாயாக காணப்பட்டன.
தங்கத்துக்கு, நிலையான விலை கிடைக்கவில்லை என, தங்க நகைக்கடை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து, சேலம் தங்க நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:தங்கத்தின் விலையில், ஒரு மாதமாக, பெரிய மாற்றம் எதுவும் இல்லை. சற்று விலை குறைந்து இருப்பதால், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தைப்பொங்கல் சமயத்தில், தங்கத்தின் விலையில் ஏறுமுகம் இருக்கும் என்பதால், இப்போதே சிலர், தங்கம் வாங்க ஆரம்பித்து விட்டனர்.அதேபோல், 25 நாட்களுக்கு முன், 10 கிராம் வெள்ளி, 60 ரூபாய்க்கு விற்பனையானது. படிப்படியாக வெள்ளி விலையும் குறைந்து, சில நாட்களாக, வெள்ளியின் விலை, ஒரு கிராம், 45 முதல் 47 வரை, மாறி மாறி விற்பனை செய்யப்படுகிறது.வெளிநாடுகளில், டிசம்பரில், ஆண்டு இறுதிக் கணக்கு முடிக்கப்படுகிறது. இதையொட்டி, அங்குள்ள தங்க நகை சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச சந்தையிலும், தங்கம் விலை உயரவில்லை. அனைத்து இடங்களிலும், தங்கம் விற்பனை அதிகரித்தால் மட்டுமே, அதன் விலை உயரும். இவ்வாறு, அவர் கூறினார்.
சர்வதேச நிலவரம்:சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்துள்ளது. மேலும், பல நாடுகளை சேர்ந்த மத்திய வங்கிகளும் தங்கம் வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளன. இதன் காரணமாக, கடந்த, 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நடப்பாண்டு, லண்டன் உலோக சந்தையில், தங்கத்தின் விலை, 29.2 சதவீதம் சரிவடைந்துள்ளது. இது, முதலீட்டாளர்களை பொறுத்தவரை, இழப்பாகும். இதற்கு முன், கடந்த, 2000ம் ஆண்டில், முதலீட்டாளர்கள், தங்கத்தின் மீதான முதலீட்டில், 2.7 சதவீதம் இழப்பை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்து வந்த, 12 ஆண்டுகளில், தங்கம், முதலீட்டாளர்களுக்கு, நல்ல அளவில் வருவாய் அளித்து வந்தது.
முதலீட்டாளர்கள்:கடந்த, 2008ம் ஆண்டு, சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, முதலீட்டாளர்களின் பார்வை, தங்கத்தின் பக்கம் திரும்பியது.இதனால், லண்டன் தினச் சந்தையில், 2011ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், வரலாறு காணாத வகையில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 1,900 டாலராக உயர்ந்தது.
இதுதான் சரியான தருணம் என்று கருதிய முதலீட்டாளர்கள், லாபம் பார்க்கும் நோக்கத்தில், தங்கத்தை மெல்ல விற்கத் துவங்கினர்.பலர், குடும்பத்தில் உள்ள தங்கத்தை விற்று, இதர துறைகளில் முதலீடு செய்தனர்.தங்க முதலீடு சார்ந்த திட்டங்களில் இருந்தும் வெளியேறினர். அது மட்டுமின்றி, குடும்பத்தினர் பலர், தங்களிடம் உள்ள பழைய நகைகளை விற்று பணமாக்கினர்.
ரூபாய் மதிப்பு:இது போன்ற காரணங்களால், தங்கம் மீதான கவர்ச்சி குறைந்து, அதன் விலை சரிவடைய வழி வகுத்துள்ளது.நடப்பாண்டில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் சராசரி விலை, 1,412.85 டாலராக குறைந்துள்ளது.நடப்பாண்டு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 12 சதவீதம் சரிவடைந்து உள்ளது.
இதன் விளைவாக, ரூபாய் மதிப்பில், தங்கத்தின் விலை, 3 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பாண்டு, ஜனவரி 1ம் தேதி, 10 கிராம், சுத்த தங்கத்தின் விலை, 30,490 ரூபாயாக இருந்தது. இது, நடப்பு டிசம்பர், 25ம் தேதி நிலவரப்படி, 29,600 ரூபாயாக குறைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, தற்போது, 61.80 – 62 வரை உள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 55 ரூபாயாக இருந்தது.இதனிடையே, வரும், 2014ம் ஆண்டிலும், தங்கம் விலை குறையும் என, பெரும்பாலான பகுப்பாய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|