பதிவு செய்த நாள்
22 பிப்2014
11:52
புதுடில்லி: "ஆதார்' அடையாள அட்டையுடன் இணைந்த, வங்கிக் கணக்கு இல்லாதவர்களும், மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர்களை பெறலாம்' என, மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும், சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை, ஒன்பதிலிருந்து, 12 ஆக மத்திய அரசு, சமீபத்தில் உயர்த்தியது. மற்றொரு புறம், மானிய விலை சிலிண்டர்களை பெறுவதற்கு, ஆதார் அட்டையுடன் இணைந்த வங்கிக் கணக்கு அவசியம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
உறுதிபடுத்த வேண்டும்: இது தொடர்பாக, முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த குழப்பத்திற்கு விடை காண, சுப்ரீம் கோர்ட் வரை, இந்த விவகாரம் எடுத்து செல்லப்பட்டது. கடைசியாக, சுப்ரீம் கோர்ட், "அரசின் மானிய பலன்களைப் பெற, ஆதார் அட்டை தேவையில்லை என்பதை, மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும்' என, அறிவித்தது. இருப்பினும், இந்த பிரச்னை குறித்து, விளக்கம் அளிக்கும்படி, லோக்சபாவில் பிரச்னை எழுப்பப்பட்டது.
இது குறித்து, மத்திய, பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி நேற்று கூறியதாவது:
கணக்கு அவசியமில்லை : மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர்களை பெறுவதற்கு, ஆதார் அட்டையுடனான கணக்கு அவசியமில்லை. இந்த கணக்கு இல்லாமலேயே, வழக்கம் போல், மானிய விலை சிலிண்டர்களை பெறலாம். இது குறித்து, விளக்கம் அளித்து அறிவிப்பு, ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும். மானிய விலை சிலிண்டர்கள் விலையை அரசு உயர்த்தாது. அதே போல், ஒரே வீட்டில், இரண்டு குடும்பங்கள் இருந்தாலும், இரண்டு காஸ் இணைப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும், புதிதாக, ஒரு கோடி காஸ் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் பெரும்பாலும், கிராமப்பகுதிகளில் தான் அதிகமாக வழங்கப்படுகின்றன.இவ்வாறு, மொய்லி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|