பதிவு செய்த நாள்
11 மார்2014
00:22
புதுடில்லி:நடப்பு, 2013 – 14ம் நிதியாண்டில், சென்ற டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், சேவைகள் துறையில், அன்னிய நேரடி முதலீடு, 60 சதவீதம் குறைந்து, 159 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.இது, சென்ற, 2012–13ம் நிதிஆண்டின், இதே காலத்தில், 404 கோடி டாலராக இருந்தது. சேவைகள் துறையில் வங்கி, காப்பீடு, பீ.பிஓ., ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கூரியர், தொழில்நுட்ப ஆய்வு உள்ளிட்ட பிரிவுகள் அடங்கியுள்ளன.மதிப்பீட்டு காலத்தில், ஒட்டுமொத்த துறைகளில், அன்னிய நேரடி முதலீடு, 3 சதவீதம் சரிவடைந்து, 2,278 கோடியில் இருந்து, 2,200 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேவைகள் துறையின் பங்களிப்பு, 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. மதிப்பீட்டு காலத்தில், கட்டுமானம், உலோகம், ஓட்டல், சுற்றுலா துறைகளிலும், அன்னிய நேரடி முதலீடு குறைந்துள்ளது.பார்லிமென்ட் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து, இந்தியாவில் முதலீடு செய்யும் முடிவை, அன்னிய முதலீட்டாளர்கள் தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்தியாவில், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய, அடிப்படை கட்டமைப்பு துறையின் வளர்ச்சிக்கு அதிக அளவில் முதலீடு தேவைப்படுகிறது.மேற்கண்ட துறைகளில், பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கு, 2012 – 17ம் ஆண்டு வரையிலான காலத்தில், 1 லட்சம் கோடி டாலர் (60 லட்சம் கோடி ரூபாய்) தேவை என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, அன்னிய முதலீடு இன்றியமையாததாக உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|