பதிவு செய்த நாள்
01 ஜூன்2014
00:25
புதுடில்லி:ஏர் – ஏஷியா இந்தியா நிறுவனத்திற்கு, சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அதன் விமான சேவையை அனுமதிக்க கூடாது என, இந்திய விமான சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (எப்.ஐ.ஏ.,) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நிதியமைச்சர்:இது குறித்து, இந்த அமைப்பின் சார்பில், நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் உள்ள விவரம் வருமாறு:ஏர் – ஏஷியாவின் விமான சேவை, வரும் 12ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவைக்கு, சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விமான சேவைக்கான உரிமம் கிடைத்த காரணத்திற்காக, ஒரே ஒரு விமானத்துடன், ஏர் – ஏஷியா விமான சேவையை துவக்க உள்ளது. அதனால், இச்சேவை குறித்து அரசு ஆய்வு செய்வது கடினம். ஆகவே, விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம், ஏர் – ஏஷியா இந்தியாவின் விமான சேவைக்கு அனுமதி வழங்கக் கூடாது என, அரசு உத்தரவிட வேண்டும்.
முந்தைய நிதியமைச்சகம் மற்றும் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஆகியவை, அவசர கதியில், ஏர் – ஏஷியா இந்தியா நிறுவனத்தின் விமான சேவைக்கு சட்ட விரோதமாக அனுமதி வழங்கியுள்ளன. விமான துறையில் அன்னிய முதலீடு தேவை தான். அது, உள்நாட்டு நிறுவனங்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். ஏற்கனவே இயங்கி வரும் உள்நாட்டு விமான நிறுவனங்களில் தான், அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்க முடியும்.
விதிமுறை:அயல்நாட்டை சேர்ந்த நிறுவனம், இந்தியாவில் புதிய விமான சேவையை துவக்க அனுமதி வழங்குவதற்கு விதிமுறைகளில் இடம் இல்லை. ஆகவே, ஏர் – ஏஷியாவின் விமான சேவையை அனுமதிக்க கூடாது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் நகல், விமான போக்குவரத்து துறை அமைச்சர் கஜபதி ராஜூவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மலேஷியாவின் ஏர் – ஏஷியா நிறுவனம், டாட்டா குழுமம், டெலஸ்ட்ரா டிரேட் பிளேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, ஏர் – ஏஷியாஇந்தியாவின் கீழ், விமான சேவையை மேற்கொள்ள உள்ளது. ஏர் – ஏஷியா விமான பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவுவெள்ளியன்று துவங்கியது. பெங்களூரூ – கோவா இடையே முதல் விமான சேவை நடைபெற உள்ளது. இதற்கு, 990 ரூபாய் என, மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கேள்விக்குறி:வெளிநாடுகளில் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வரும் ஏர் – ஏஷியா, பல்வேறு தடைகளை கடந்து, இந்தியாவில் கால் பதித்துஉள்ளது.
இது, உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக விளங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அதன் விமான சேவைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இதனால், ஏர் – ஏஷியா திட்டமிட்டபடி, வரும் 12ம் தேதி, விமான சேவையை துவக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|