பதிவு செய்த நாள்
02 ஜூன்2014
15:19
சென்னை : தடை காலம் முடிந்து, தமிழகத்தில், மீன்பிடி தொழில் சூடுபிடித்தாலும், மீன் விலை இன்னும் குறையவில்லை. விசைப்படகுகள் கரை திரும்ப நான்கு நாட்களாகும் என்பதால், அசைவ பிரியர்கள், அதுவரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட, கிழக்கு கடலோரப் பகுதிகளில் (வங்கக்கடல்), மீன்களின் இன விருத்திக்காக, 45 நாட்கள், மீன்பிடி தடை விதிக்கப்பட்டிருந்தது. மக்கள் முகாம் இந்தத் தடை, மே, 29ம் தேதியுடன் முடிந்தது. தொடர்ந்து, 45 நாட்களாக ஓய்வெடுத்த விசைப்படகுகள், 30ம் தேதி அதிகாலையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்றன. தமிழகம் முழுவதும் உள்ள, 15 ஆயிரம் விசைப்படகுகளில், 60 சதவீதம் படகுகள் கடலுக்குள் சென்றுள்ளன. இதனால், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள துறைமுகங்களும் களைகட்டியுள்ளன.
கடலுக்குள் சென்ற சில படகுகள், ஓரிரு நாட்கள் மீன்களை பிடித்துவிட்டு, நேற்று காலை, கரைக்கு வந்தன. குறைந்த விலையில் மீன்கள் கிடைக்கும் என, அசைவ பிரியர்கள், மீன்பிடி துறைமுகங்களில் முகாமிட்டனர். சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஓரளவிற்கு மீன்கள் வந்தன; ஆனால், விலையில் மாற்றம் இல்லை.
விலை நிலவரம் வஞ்சிரம் முதல் ரகம் - 900 ரூபாய்; இரண்டாம் ரகம் - 500; இறால் முதல் ரகம் - 1,110; இரண்டாம் ரகம் - 450; நண்டு, 200 முதல் 250 ரூபாய்; சீலா - 300; பாறை - 220 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகின. துக்கடா மீன்கள் கூட, கிலோ, 100 ரூபாய்க்கு மேல் தான் விற்றன. விலை குறையாததால், அசைவ பிரியர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். விசைப்படகு மீனவர்கள் கூறியதாவது: மீன்பிடி தடை, மே, 29 நள்ளிரவு தான் முடிந்தது. 30ம் தேதி அதிகாலை தான் விசைப்படகுகள் கடலுக்குள் சென்றன. ஓரிரு நாளில் திரும்பும் படகுகள் தான் கரைக்கு வந்துள்ளன.
மீன் வரத்தும் குறைவாகவே உள்ளது. வழக்கமாக, விசைப்படகுகள், ஒரு வாரம் முதல், 10 நாட்கள் கழித்து தான் கரை திரும்பும். 30ம் தேதி சென்ற விசைப்படகுகள், 5, 6ம் தேதிகளில் தான் கரை திரும்பும். எல்லாரும் எதிர்பார்க்கும் அளவில், மீன் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால், மீன் விலையும் வெகுவாகக் குறையும். அதுவரை, அசைவ பிரியர்கள் காத்திருக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|