பதிவு செய்த நாள்
20 ஜூன்2014
01:02
புதுடில்லி;சோயா விதை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நடப்பு கரீப் பருவத்தில், அதன் நடவுப் பணிகளை விவசாயிகள் முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கரீப் பருவம்:இதனால், நடப்பு 2013–14ம் சோயா பருவத்தில் (அக்.,–செப்.,), நாட்டின் சோயா உற்பத்தி, 1.19 கோடி டன்னாக குறையும் என, மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. கடந்த, 2012–13ம் சோயா பருவத்தில், சோயா உற்பத்தி, 1.46 கோடி டன்னாக இருந்தது.புரதச் சத்து நிறைந்த சோயா உற்பத்தியில், மத்திய பிரதேசம் முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
நடப்பாண்டு துவக்கத்தில், மகாராஷ்டிராவில் பெய்த ஆலங்கட்டி மழையால், சோயா உட்பட பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால், சோயா பயிரிடுவதற்கு, போதிய அளவில் விதைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.நாடு தழுவிய அளவில், சான்றளிக்கப்பட்ட தரமான சோயா விதைகளுக்கான பற்றாக்குறை, 69,616 டன்னாக இருக்கும் என, மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. கரீப் பயிரான சோயாவின் விதைப்பு பணிகள், ஜூன் – ஜூலையில் நடைபெறும். செப்., – நவம்பரில் அறுவடை செய்யப்படும்.நடப்பு கரீப் பருவத்திற்கு தேவையான, 3.43 லட்சம் டன் சோயா விதையில், 2.73 லட்சம் டன் தான் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. சோயா விதையின் பற்றாக்குறை யால், அதன் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு, 50 ரூபாய்க்கு கிடைத்த, தரமான, ஒரு கிலோ சோயா விதை, தற்போது, 70 ரூபாயாக அதிகரித்துள்ளது என, விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
சேமிப்பு:பெரும்பாலான விவசாயிகள், கையிருப்பில் உள்ள கடந்த ஆண்டு விதைகளை நடப்பு பருவத்தில் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், சோயா விவசாயிகள், கடந்த பருவத்து பயிர்களின் விதைகளை சேமித்து பயன்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது.சோயா விதை தட்டுப்பாடும், அதை தொடர்ந்து உற்பத்தி குறையும் என்ற மதிப்பீடும், சோயா பொருட்களின் விலை உயர வழி வகுக்கும் என, அஞ்சப்படுகிறது. தற்போது, ஒரு குவிண்டால் (100 கிலோ) சோயா, 4,200 – 4,500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
சோயாவில் இருந்து தாவர எண்ணெய், மசகு எண்ணெய், கால்நடைகளுக்கான சோயா புண்ணாக்கு மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சோயா புண்ணாக்கு விலை உயர்ந்தால், கோழிப் பண்ணை துறை பாதிக்கப்படும். சோயா பொருட்களின் விலை உயர்வால் நுகர்வோரும் பாதிக்கப்படுவர்.
ஏற்றுமதி:சோயா புண்ணாக்கு ஏற்றுமதியை தற்காலிகமாக கட்டுப்படுத்துவதன் மூலம், உள்நாட்டில் அதன் விலை உயர்வை ஓரளவு தடுக்க முடியும். இந்தியா, ஆண்டுக்கு, 20 லட்சம் டன் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி மேற்கொண்டு, சர்வதேச அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, சோயா புண்ணாக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|