பதிவு செய்த நாள்
22 ஜூன்2014
00:13
புதுடில்லி :சீனா, நடப்பு நிதியாண்டில், பருத்தி நுாலிழை இறக்குமதியை குறைக்க முடிவு செய்துள்ளதால், அந்நாட்டிற்கான இந்தியாவின் பருத்தி நுாலிழை ஏற்றுமதி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த சில ஆண்டுகளாக, கடுமையான பாதிப்பில் இருந்து, தற்போது மீண்டு வரும் இந்திய நுாற்பாலைகளுக்கு கவலையை அளித்துள்ளது.
கையிருப்பு:சீனா, உலக நாடுகளிடம் இருந்து அதிக அளவில் பருத்தியை இறக்குமதி செய்து வருகிறது. அவற்றில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. இந் நிலையில், அளவிற்கதிகமான பருத்தி கையிருப்பு மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், பருத்தி, பருத்தி நுாலிழை ஆகியவற்றின் இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கையில், சீனா ஈடுபட்டுள்ளது.
இதனால், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பருத்தி மற்றும் பருத்தி நுாலிழை ஏற்றுமதி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2008ம் ஆண்டு, சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதில் இருந்து, இந்திய நுாற்பாலைகள் கடுமையான போராட்டத்தை சந்தித்து வந்தன. இதனிடையே, பருத்தி விலை வீழ்ச்சி, மின் தட்டுப்பாடு போன்றவையும், நுாற்பாலைகளை கடுமையாக பாதித்தன. இதனால், நாடு தழுவிய அளவில், 380 நுாற்பாலைகள் மூடப்பட்டன. இதில், 70 சதவீதத்திற்கும் அதிகமான ஆலைகள், தமிழகம் மற்றும் குஜராத்தில் செயல்பட்டு வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாட்டின் பருத்தி உற்பத்தி அதிகரித்ததை அடுத்து, தென்னிந்தியாவில் மூடிக் கிடந்த நுாற்பாலைகள் புத்துயிர் பெற்றன. இத்துடன், மத்திய அரசு, கடந்த 2013–14ம் நிதியாண்டில் அறிவித்த, ஏற்றுமதி சார்ந்த ஊக்கத் தொகை திட்டமும், நுாற்பாலைகளை எழுச்சி காண வைத்தது. இதனிடையே, குஜராத் அரசு அறிவித்த, வட்டி மானிய திட்டமும், அம்மாநில நுாற்பாலைகளுக்கு ஊக்கமளித்தது.
புதிய சந்தை:இதை தொடர்ந்து, குஜராத்தில் மட்டும், 80 புதிய நுாற்பாலைகள் செயல் பாட்டிற்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இது போன்ற நிலையால், கடந்த நிதியாண்டில், பருத்தி நுாலிழை ஏற்றுமதி, 150 கோடி கிலோவாக உயர்ந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 111 கோடி கிலோவாக இருந்தது.
இந்நிலையில், சீனா, பருத்தி மற்றும் பருத்தி நுாலிழை இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது, புதிய விடியலை கண்ட இந்திய நுாற்பாலைகளின் வளர்ச்சிக்கு அணை போடுவது போல் அமைந்துள்ளது. இதனால், புதிய ஏற்றுமதி சந்தை களை அடையாளம் காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என, நுாலிழை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|