பதிவு செய்த நாள்
15 ஜூலை2014
00:26
சூரிய மின்தகடு இறக்குமதிக்கு பொருள் குவிப்பு வரி விதித்தால், உள்நாட்டு தயாரிப்புகளை புறக்கணித்து, வரி விதிப்பிற்கு உட்படாத பிற நாடுகளில் இருந்து அவற்றை தருவிப்போம் என, சூரிய மின் உற்பத்தி நிறுவனங்கள் மத்திய அரசிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. இதனால், சூரிய மின்தகடுக்கு பொருள் குவிப்பு வரி விதிக்கும் திட்டத்தை, மத்திய அரசு, செயல்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரு மடங்குசீனா, தைவான் போன்ற நாடுகளில் இருந்து, மலிவு விலையில் சூரிய மின் உற்பத்திக்கான தகடுகள் இறக்குமதியாகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட உள்நாட்டு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, சூரிய மின்தகடுகளின் இறக்குமதிக்கு, பொருள் குவிப்பு வரி விதிக்க வேண்டும் என, கடந்த மே மாதம், பொருள் குவிப்பு தடுப்பு தலைமை இயக்குனரகம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
இதன்படி, அமெரிக்கா, சீனா, மலேசியா, தைவான் ஆகிய நாடுகளின் சூரிய மின்தகடு இறக்குமதிக்கு பொருள் குவிப்பு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், சூரிய மின்தகடுகளின் விலை இரு மடங்கு உயர்ந்து,உள்நாட்டு தயாரிப்புகளின் பயன்பாடு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், தேவையான சூரிய மின்தகடுகளை உற்பத்தி செய்யும் திறன் இல்லாத உள்நாட்டு நிறுவனங்களை நம்பியிருக்க மாட்டோம் என, மத்திய அரசிடம், சூரிய மின் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தரம்:இதுகுறித்து, புதிய மற்றும் மரபு சாரா எரிசக்தி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொருள் குவிப்பு வரி அமலானால், அந்த வரி விதிப்பு பட்டியலில் இடம் பெறாத, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், கனடா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து, சூரிய மின்தகடுகளை இறக்குமதி செய்வோம் என, மின் உற்பத்தி நிறுவனங்கள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன. இந்நாடுகள், 6,000 – 8,000 மெகாவாட் சூரிய மின்தகடுகளை தயாரிக்கும் திறன் கொண்டவை.
அதே சமயம், உள்நாட்டில் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன், 1,260 மெகாவாட் என்ற அளவிற்கே உள்ளது. அதிலும், 240 மெகாவாட் அளவிற்கே மின்தகடு உற்பத்தி உள்ளது. தரமும், வெளிநாட்டு தயாரிப்புகளை விட குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், விலை அதிகம் என்றாலும், தரமான சூரிய மின்தகடுகளை இறக்குமதி செய்ய சூரிய மின்உற்பத்தி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இதை அரசிடமும் தெரிவித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.இந்தியாவில், ஆண்டுக்கு 3,000 மெகாவாட் மின்உற்பத்திக்கான, சூரிய மின்தகடுகள் தேவைப்படுகின்றன. அண்மையில், நாடு தழுவிய அளவில் சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 4,000 மெகாவாட் அளவிற்கு, சூரியமின்தகடுகளின் தேவை உயரும் என,தெரிகிறது.
தீர்வு:‘இந்த அளவிற்கு உள்நாட்டில் உற்பத்தி இல்லாததால், கூடுதல் விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு சூரிய மின் உற்பத்தி நிறுவனங்கள் ஆளாகும்’ என, சூரிய மின் உற்பத்தி நிறுவன உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இறக்குமதியாகும் மின்தகடுகளால், சூரிய மின் உற்பத்தி செலவு உயரும் என, இத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது, ஒரு யூனிட் சூரியமின் உற்பத்தி செலவு, 6.50 – 8 ரூபாயாக உள்ளது. இது, உள்நாட்டு சூரிய மின்தகடுகளை பயன்படுத்துவதன் மூலம், வரும் 2020ம் ஆண்டு வரை, 7.50 ரூபாய் என்ற அளவில் நிலையாக இருக்கும் என, சூரியமின் தகடு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.சூரிய மின்தகடு தயாரிப்பு நிறுவனங்கள், சூரியமின் உற்பத்தி நிறுவனங்கள், மத்திய அரசு, ஆகிய முத்தரப்பும் இணைந்து, சுமுக தீர்வு காண வேண்டும் என்பது, இத்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.-– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|