பதிவு செய்த நாள்
22 பிப்2016
09:08
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுஇருப்பது, முதலீட்டாளர்களுக்கு என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும்?
எதிர்பார்த்தது போலவே சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடர்பான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஒன்று, இரண்டு மற்றும், மூன்று ஆண்டு அஞ்சலக டிபாசிட், கிசான் விகாஸ் பத்திரம் மற்றும், ஐந்து ஆண்டு தொடர் டிபாசிட் திட்டம் ஆகியவற்றுக்கான வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதுடன், வட்டி விகிதம் இனி காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகித குறைப்பு உள்ளிட்ட இந்த மாற்றங்கள், வட்டி விகிதம் தொடர்பாக நிலவும் வேறுபாட்டை சரி செய்ய உதவும் என்று கருதப்படுகிறது. சிறுசேமிப்பு திட்டங்களை நாடும் முதலீட்டாளர்களுக்கு இது, பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் உண்டாகியுள்ளது.
மாற்றம் ஏன்?: அரசு வழங்கும் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித மாற்றம் தேவை எனும் கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை குறைத்தும் கூட, வங்கிகள் அதன் முழு பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை எனும் கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால், வங்கிகள் தரப்பில் வைப்பு நிதிகளுக்கான வட்டியை விட, சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், வட்டி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் சிக்கல் இருப்பதாக பதில் அளிக்கப்படுகிறது.
குறைந்த வட்டி விகித நிலை இருக்க வேண்டும் எனில், ஒரு சில திட்டங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் கட்டுப்படுத்தப்படும் நிலை இருக்கக் கூடாது என்றும், அனைத்து வட்டி விகிதங்களும் சந்தை நிலைக்கு ஏற்ப அமைய வேண்டும் என்றும் வாதிடப்படுகிறது.
ரிசர்வ் வங்கியும், இது தொடர்பாக அரசை வலியுறுத்தி வந்தது. இதன் பயனாகவே நிதி அமைச்சகம், வட்டி விகித குறைப்பு மற்றும் காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிடும் முறையை அறிவித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்: நிதி அமைச்சக அறிவிப்பின்படி, அஞ்சலக குறுகிய கால டிபாசிட் திட்டங்கள் மற்றும் தொடர் டிபாசிட் திட்டம் இனி, 8.15 சதவீத வட்டியை அளிக்கும். கிசான் விகாஸ் பத்திரங்கள், 8.45 சதவீத வட்டியை அளிக்கும்.
மேலும் இந்த வட்டி விகிதம், ஏப்ரல் மாதம் முதல், சந்தை நிலைக்கு ஏற்ப காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு அறிவிக்கப்படும். தற்போது இவை, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. அரசு பத்திரங்களை அளவுகோளாகக் கொண்டு இவற்றின் வட்டி நிர்ணயிக்கப்படுகிறது.
எனினும் நீண்டகால சேமிப்பு திட்டங்களான மாதாந்திர வருமான திட்டம், பொது வைப்பு நிதி (பி.பி.எப்.,), மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் செல்வமகள் திட்டம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழ்களுக்கான வட்டி கணக்கிடல், ஆண்டுக்கு இரு முறை என்பதற்கு பதிலாக, இனி ஆண்டுக்கு ஒரு முறை கூட்டு வட்டி அடிப்படையில் அமைய உள்ளது.
என்ன பாதிப்பு?: சிறுசேமிப்பு வட்டி விகிதங்கள், வங்கிகள் வைப்பு நிதியை குறைப்பதற்கு தடையாக இருக்கின்றன எனும் கருத்து முன்வைக்கப்படுகிறது. வங்கிகள் கடனுக்கான வட்டி விகித குறைப்பை அறிவிக்க, வைப்பு நிதி வட்டி குறைப்பும் அவசியம். வைப்பு நிதிகளை விட, சிறுசேமிப்பு திட்டங்கள் அதிக ஈர்ப்புடையதாக இருப்பதால் வங்கிகளுக்கு இது சிக்கலாகிறது.
இந்த நிலையில், ஏப்ரல் மாதம் முதல், சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சிறுசேமிப்பு வட்டி விகிதம் மாற்றப்பட உள்ளது. இதன் காரணமாக, சிறுசேமிப்பு திட்டங்களின் மீதான பலன் மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால், சிறு முதலீட்டாளர்களின் ஈர்ப்பு குறையலாம்.
வட்டி விகித மாற்றத்தால், கிசான் விகாஸ் பத்திரம் அளிக்கும் இரட்டிப்பு பலனை பெற தற்போதைய, 100 மாதங்களுக்கு பதிலாக, 104 மாதங்கள் ஆகலாம். வட்டி விகிதம், 7.5 சதவீதமாகக் குறையும் நிலை ஏற்பட்டால் இதற்கு, 114 மாதங்கள் தேவைப்படலாம். கூட்டு வட்டி விகித முறையில் ஏற்பட்ட மாற்றமும் இவற்றுக்கான பலனில் தாக்கத்தை உண்டாக்கும்.
எனினும், நீண்ட கால சேமிப்பு திட்டங்கள் மீதான ஈர்ப்பை இவை அதிகமாக்கும் என்றும் கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|