பதிவு செய்த நாள்
14 மார்2016
23:42
புதுடில்லி : முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், இந்தாண்டுக்குள், ‘ஆர்ஜியோ’ நிறுவனத்தின் தொலை தொடர்பு சேவையை, அறிமுகப்படுத்த உள்ளது.
இது, தொலை தொடர்பு துறையில் உள்ள, ‘ஏர்டெல், வோடபோன், ஐடியா’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடும் போட்டியை உண்டாக்கும் என, தர நிர்ணய நிறுவனங்களான, கிரிசில், இந்தியா ரேட்டிங்ஸ் ஆகியவை மதிப்பிட்டுள்ளன. ஆர்ஜியோவை சமாளிக்க, அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு, போட்டி நிறுவனங்கள் கூடுதலாக செலவழிக்கும் என்பதால், அவற்றின் லாப வரம்பு குறையும்.குறிப்பாக, ‘பேச்சு மற்றும் தகவல் வழிச் சேவைகள் வாயிலாக, ஒரு சந்தாதாரரிடம் இருந்து பெறும் சராசரி வருவாய், வெகுவாக குறைந்து விடும்’ என, இந்தியா ரேட்டிங்ஸ் எச்சரித்துள்ளது. அதுபோல, கிரிசில் நிறுவனம், ‘ஆர்ஜியோவின் வருகையால் தொலை தொடர்பு துறையில் முதலீடு செய்வது, லாபகரமாக இருக்காது’ என கூறியுள்ளது.
ரூபாய் 98 ஆயிரம் கோடி முதலீட்டில், உருவாக்கி உள்ள இந்நிறுவனம், தொலை தொடர்பு சேவையை துவக்கினால், தற்போதுள்ள நிறுவனங்களால் அதிருப்தி அடைந்துள்ள வாடிக்கையாளர்கள், அதற்கு மாறுவர். இதன் மூலம், ஆர்ஜியோ, தொலை தொடர்பு துறையில், குறிப்பிடத்தக்க சந்தைப் பங்களிப்பை கைப்பற்றும். புதிய விதிமுறைகளின்படி, பயன்படுத்தாத அலைவரிசையை, பிற நிறுவனங்களுக்கு வழங்க, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஆர்ஜியோவின் போட்டியால், சிறிய நிறுவனங்கள், இந்த விதிமுறையை பின்பற்றி, பெரிய நிறுவனங்களுக்கு அலைவரிசையை வழங்கி, இழப்பை தவிர்க்க முயலும் என, இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
வருது... வருது...ஆர்ஜியோ, தற்போதுள்ள மொபைல் போன் சேவை நிறுவனங்களை விட, மேம்பட்ட தொழில்நுட்பத்தில், பல்வேறு கூடுதல் வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தில் துல்லியமான தொலை தொடர்பு, இணையத்தை மிக விரைவாக அணுகும் வாய்ப்பு, ‘டிவி’யில், விருப்பமான திரைப்படங்கள், தொடர்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காணும் வசதி ஆகியவற்றுடன், வீடுகளில் கண்காணிப்பு கேமரா சேவையையும், தொகுப்பாக வழங்க, ஆர்ஜியோ திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|