பதிவு செய்த நாள்
25 ஏப்2016
00:27
பி.எப்., பணத்தை எடுப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை அரசு விலக்கி கொண்டிருந்தாலும், தவிர்க்க இயலாத அவசரத் தேவைக்கு மட்டுமே பணத்தை எடுக்க வேண்டும் என, நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர்.
பி.எப்., பணத்தை எடுப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை அரசு திரும்ப பெற்றுள்ளது, ஊழியர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. ஏற்கனவே பட்ஜெட்டில் பி.எப்., நிதிக்கு, வரி விதிப்பு யோசனை முன்வைக்கப்பட்டு தொழிலாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த முடிவு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனிடையே, பி.எப்., பணத்தை எடுப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. பிப்ரவரி மாதம் பி.எப்., அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை படி, ஊழியர்கள் முழுத்தொகையையும் இடையே விலக்கி கொள்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
புதிய கட்டுப்பாடு விதிமுறை படி, வேலையில் இருந்து விலகிய ஊழியர்கள் தொடர்ந்து இரண்டு மாதத்திற்கு மேல் புதிய வேலையில் சேராமல் இருந்தாலும் கூட, தங்கள் பங்கு பி.எப்., நிதியை மட்டுமே எடுக்கும் நிலை உண்டானது. நிறுவனம் சார்பில் செலுத்தப்படும் தொகையை, அவர்கள் ஓய்வு காலத்தில் மட்டுமே எடுக்க முடியும்.
கடும் எதிர்ப்புபொதுவாக ஓய்வு காலத்திற்கான பாதுகாப்பாக கருதப்படுவதால், பி.எப்., நிதியை குறிப்பிட்ட முக்கிய தேவைகளுக்கு மட்டுமே இடையில் எடுக்க முடியும். எனினும், இடைப்பட்ட காலத்தில் பணியில் இருந்து விலகுபவர்கள் புதிய தொழில் துவங்குவது உள்ளிட்ட பல காரணங்களுக்காக பி.எப்., நிதியை எடுக்க முற்படலாம். இந்த தேவைகளுக்காக முழு நிதியையும் எடுக்க முடியாது எனும் கட்டுப்பாடு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே தான், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டமும் நடத்தப்பட்டது. இதையடுத்து, புதிய கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.
அவசர தேவைஇதனால், பி.எப்., நிதியை எடுப்பதில் உள்ள தடை நீங்கியுள்ளது. பி.எப்., சந்தாதாரர்களுக்கு இது நல்ல செய்தி என்றாலும், தவிர்க்க இயலாத அவசரத்தேவைக்கு மட்டுமே பி.எப்., நிதியில் கைவைக்க வேண்டும் என, நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர்.பி.எப்., என்பது ஓய்வுகால நிதி என்பதால், மருத்துவ தேவை ஏற்பட்டு, இந்த நிதி தவிர வேறு வழியில்லை எனும் சூழலில் மட்டுமே பி.எப்., நிதியை எடுப்பது சரியாக இருக்கும் என்கின்றனர்.
வீடு கட்டுதல், கல்வி, திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்காக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் கூட, இவற்றை அவசர தேவையாக கருத முடியாது என, நிதி ஆலோசகர்கள் கருதுகின்றனர். வீடு வாங்குவதை தள்ளிப்போடலாம் அல்லது குறைந்த விலையில் வாங்க முற்படலாம் என்று ஆலோசனை கூறுகின்றனர். மருத்துவ தேவை தவிர, மற்ற முக்கிய தேவைகளுக்கு கடன் வாங்குவது உள்ளிட்ட வேறு வழிகளை நாட முயற்சிக்க வேண்டும் என்கின்றனர்.
கூட்டு வட்டியின் பலன் இடைப்பட்ட காலத்தில் பி.எப்., நிதியை முழுவதும் எடுத்துக்கொள்ள தகுதி உடையவர்கள் கூட, தவிர்க்க இயலாத காரணங்கள் இல்லாத பட்சத்தில் முதலீட்டை தொடர்வதே சரியாக இருக்கும் என, நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர். பி.எப்., ஓய்வு கால பாதுகாப்பு அளிக்கும் நிதி. மேலும், இது பென்ஷன் மற்றும் காப்பீடு வசதியையும் கொண்டுள்ளது. பி.எப்., முதலீட்டிற்கு, 8.8 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. சேமிப்பு திட்டங்களை விட இது கூடுதல் பலன் அளிக்க கூடியது. பி.எப்., நிதி, அதிக வட்டி அளிப்பதோடு, கூட்டு வட்டி அடிப்படையில் நீண்ட கால நோக்கில் மிகச்சிறந்த பலன் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் விலக்கி கொண்டால் இந்த பலனை இழக்க நேரிடும்.
அதேபோல பி.எப்., முதலீடு எல்லா நிலைகளிலும் வரிச்சலுகை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. தொடர்ந்து பணம் செலுத்தப்படாமல் முடங்கிய கணக்காக இருக்கும் நிலையிலும் வட்டி அளிக்கப்படும் என, அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து வட்டி வருமானம் கிடைக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.எனவே, பி.எப்., நிதியை அதன் அடிப்படை தன்மை புரிந்து கொண்டு கையாள வேண்டும் என, நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|