பதிவு செய்த நாள்
02 மே2016
07:58
சிறுசேமிப்பிற்கான வட்டி விகிதம் மற்றும் வங்கி டிபாசிட் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் இவற்றை விட அதிக பலன் தரக்கூடிய, பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலிக்கத் துவங்கியுள்ளனர்.இதன் விளைவாக அரசின், 8 சதவீத சேமிப்பு பத்திரங்கள் மீதான கவனம் அதிகரித்திருப்பதாக நிதி வல்லுனர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு சார்பில், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் இந்த பத்திரங்கள் வைப்பு நிதியை விட கூடுதல் பலனை அளிக்கின்றன. இவற்றில் ஆறு வருடங்களுக்கு முதலீடு செய்யலாம். கடந்த, 2003ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பத்திரங்கள் மீது, இப்போது முதலீட்டாளர்கள் மீண்டும் ஆர்வம் காட்டுவதாக நிதி ஆலோசகர்கள் கருதுகின்றனர்.
யார் முதலீடு செய்யலாம்?வெளிநாட்டு இந்தியர்கள் நீங்கலான, தனிநபர்கள், 8 சதவீத சேமிப்பு (வரி விதிக்கப்படக்கூடியது) பத்திரங்களில் முதலீடு செய்யலாம். தனியாக அல்லது கூட்டாக பத்திரங்களை வாங்கலாம். பெற்றோர் அல்லது வாரிசு சார்பாக, இந்து கூட்டு குடும்பம் சார்பில் வாங்கலாம்.
என்ன பலன்? குமுலேட்டிவ் மற்றும் நான் குமுலேட்டிவ் என, இரண்டு வகை பத்திரங்களில் இருந்து தேர்வு செய்யலாம். ஆண்டுக்கு, 8 சதவீத வட்டி கிடைக்கும். வட்டி, அரையாண்டுக்கு ஒருமுறை அளிக்கப்படும். குமுலேட்டிவ் பத்திரங்களுக்கு ஆறு ஆண்டு முடிவில், 1,000 முதலீட்டின் மீதான பலன், 1,601 ரூபாயாக இருக்கும். பத்திரங்கள் மீதான வட்டிக்கு வருமான வரி உண்டு. டி.டி.எஸ்.,சாக வரி பிடித்தம் செய்து கொள்ளப்படும்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்? குறைந்த பட்ச தொகையாக, 1,000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை. ஆனால், ஆயிரத்தின் பெருக்கலாக இருக்க வேண்டும். பத்திரம் வழங்கப்பட்ட நாள் முதல், ஆறு ஆண்டுகள் முதலீட்டு காலம். முதிர்வு காலத்திற்கு பின் வட்டி கிடையாது.
எங்கு வாங்கலாம்? ‘பாண்ட் லெட்ஜர் அக்கவுண்ட்’ வடிவில் பத்திரங்கள் வழங்கப்படும். ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, எச்.டி.எப்.சி., வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகள் மற்றும் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் போன்ற சில அமைப்புகள் இவற்றை வழங்குகின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|