பதிவு செய்த நாள்
18 ஜூன்2016
07:38
மும்பை : ‘‘இந்தியாவில், வலைதளங்கள் வாயிலாக பொருட்களை விற்பனை செய்வோரின் எண்ணிக்கை, வரும், 2020ல், ஒரு கோடியாக உயரும்,’’ என, கூகுள் இந்தியா நிறுவனத்தின், தொழிற்பிரிவு இயக்குனர் நிதின் பவன்குலி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:அழகு பராமரிப்பு பொருட்கள், ஆடை, வீட்டு பயன்பாட்டு ஜவுளிகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளில், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதில், வலைதள விற்பனையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு, வலைதளங்கள் மற்றும் கடைகளுக்கு இடையிலான விற்பனையில், ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும்.இந்தியாவில், 35 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர்; இது, 2020ல், 65 கோடிக்கும் மேலாக அதிகரிக்கும். தற்போது, வலைதளங்கள் வாயிலாக, ஒரு கோடிக்கும் அதிகமானோர் பொருட்களை வாங்குகின்றனர்.
நகர்ப்புறங்களில், 7.5 கோடி பேர், இணையத்தை பயன்படுத்துகின்றனர். இது, கிராமப்புறங்களில், 20 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்த நிலை, வேகமாக மாறி வருகிறது.அடுத்த ஐந்து ஆண்டுகளில், கிராமப்புறங்களில், 25 கோடிக்கும் அதிகமானோர், இணையத்தை பயன்படுத்துவர். அதற்கேற்ப, வலைதள விற்பனையாளர்கள், தங்கள் வணிகச் செயல்பாடுகளை அமைத்தால், வெற்றி பெறலாம். தற்போது, இணையத்தை பயன்படுத்துவதில், 30 சதவீதமாக உள்ள பெண்களின் பங்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 40 சதவீதமாக உயரும். இது, ஆரோக்கிய பராமரிப்பு, கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். பெண்கள் அதிக அளவில், வலைதளப் பொருட்களை வாங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|