பதிவு செய்த நாள்
06 ஜூலை2016
05:01
சென்னை : தமிழக கடலோரம், மேலும், எட்டு இடங்களில், 800 கோடி ரூபாய் முதலீட்டில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்து ஆய்வு மேற்கொள்ள, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவ மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீல் நிறுவனம், பிரிட்டிஷ் காஸ் நிறுவனத்துடன் இணைந்து, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் ஆய்வு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. ரிலையன்சுக்கு, வங்காள விரிகுடாவில், தமிழகம் – புதுச்சேரி கடலோர பகுதியில், ‘டி.ஒய்.111 – டி5’ என்ற எண்ணெய் ஆய்வுத் தொகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில், 11 இடங்களில், எண்ணெய் கிணறுகளை தோண்டி, ஆய்வு நடத்த, ரிலையன்சுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில், ஒன்பது கிணறுகளை தோண்டியதில், மூன்று கிணறுகளில், எண்ணெய், எரிவாயு வளம் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மேலும், எட்டு இடங்களில் எண்ணெய் வள ஆய்வு மேற்கொள்ள, ரிலையன்ஸ் அனுமதி கோரியிருந்தது. இதற்கு, தற்போது, பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், எண்ணெய் வள ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என, ரிலையன்சுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரிலையன்ஸ், 800 கோடி ரூபாய் திட்டச் செலவில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் குறித்த ஆய்வுப் பணியை, விரைவில் துவக்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|