பதிவு செய்த நாள்
08 ஜூலை2016
04:42
புதுடில்லி : ‘முடங்கியுள்ள பல திட்டங்கள் இன்னும் உயிர் பெறாததால், இந்தியாவில் கடந்த, ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை’ என, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்:நிதி நெருக்கடி, தேவைப்பாடு குறைந்தது, தனியார் துறையினரின் கடன் அதிகரிப்பு போன்றவை, இந்தியாவில் புதிய முதலீடுகளுக்கு தடைக் கற்களாக உள்ளன. மதிப்பீட்டு காலாண்டில், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. முடங்கியுள்ள திட்டங்கள் அதிகரிக்கவில்லை என்ற போதிலும், அவற்றின் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களும், கடந்த, 2006 – 11ம் நிதியாண்டுகளில், இதே மதிப்பீட்டு காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், சராசரியாக, நான்கில் ஒரு பங்கு என்ற அளவிற்கே உள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில், வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது, பணவீக்கம், ரூபாய் மதிப்பு ஓரளவு கட்டுக்குள் உள்ளது. திட்டங்களுக்கு வேகமாக அனுமதி தரப்படுகிறது. இருந்தபோதிலும், தனியார் துறை முதலீடுகளில் வளர்ச்சி இல்லாத நிலை காணப்படுகிறது. கடந்த நிதியாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டில், பல்வேறு திட்டங்களுக்கான அரசு முதலீடு அதிகரித்த போதிலும், அவற்றில் தனியார் துறை முதலீடு அதிகரிக்கவில்லை.முடங்கியுள்ள திட்டங்களின் மதிப்பு, 11 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில், மிகவும் அதிகமாக உள்ளது. இதில், தனியார் துறையின் பங்கு, 75 சதவீதமாக உள்ளது.
உரிய நேரத்தில் அனுமதி கிடைக்காமலும், மூலப் பொருட்கள் பற்றாக்குறையாலும், 42 சதவீத திட்டங்கள் முடங்கியுள்ளன. இதில், அதிகபட்சமாக மின்துறையில், 31 சதவீதம், உருக்கு துறையில், 25 சதவீத திட்டங்கள் அடங்கும். தற்போதைய சூழலில், தனியார் துறையில் முதலீடுகள் அதிகரிக்க சில காலம் ஆகும் என, தெரிகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|