பதிவு செய்த நாள்
23 ஜூலை2016
01:14
புதுடில்லி : நிறுவனங்கள், நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளும், ஒப்பந்த ஊழியர்களுக்கும் கிடைக்க வகை செய்யும் விதிமுறையை, விரைவில் அமலுக்கு கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
ஜவுளித் துறைக்கான புதிய தொழிலாளர் கொள்கையை, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில், ‘பிக்சட் டேர்ம் ஒர்க்கர்’ எனப்படும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி ஜவுளித் துறையில், நிரந்தர தொழிலாளர்களுக்கான வேலை நேரம், ஊதியம், ஊக்கத்தொகை உள்ளிட்ட பிற சலுகைகள், அத்துறையில், குறிப்பிட்ட காலத்திற்கு பணியமர்த்தப்படும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் கிடைக்கும். இந்த வசதியை, ஜவுளித் துறை மட்டுமின்றி, தயாரிப்பு, சேவைகள் உள்ளிட்ட அனைத்து தொழில் துறைகளுக்கும் விரிவுபடுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மத்திய தொழிலாளர் நல அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிறுவனங்கள், ஒப்பந்த அடிப்படையில், குறிப்பிட்ட காலத்திற்கு தொழிலாளர்களை பணியமர்த்துவது தொடர்பான விதிமுறைகள், தொழில் தகராறுகள் சட்டத்தில், ஏற்கனவே உள்ளன. எனினும், அவை மிகத் தீர்க்கமாக வரையறுக்கப்படவில்லை. இதனால், அதிகளவில் ஒப்பந்த தொழிலாளர்களை சார்ந்துள்ள கட்டுமானம், சுரங்கம் உள்ளிட்ட தொழில்களில் உள்ள நிறுவனங்கள், அந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.
இதன் காரணமாக, மத்திய அரசு, குறித்த காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள் தொடர்பான விதிமுறைகளை, மேலும் வலுப்படுத்த திட்டமிட்டு உள்ளது. இந்த விதிமுறைகள், அரசாணை மூலம், தொழில் வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். இதன் மூலம், அனைத்து தொழில் மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்களை, முறைப்படி நியமிக்கும் நிலை ஏற்படும். இதனால், ஒப்பந்த தொழிலாளர்களும், நிறுவனங்களும் பரஸ்பரம் பயன்பெறும் நிலை உருவாகும். தொழிலாளர் – நிறுவனங்கள் இடையிலான தகராறுகள் குறையும். அனைத்து துறைகளிலும், அதிகார பூர்வமான முறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய திட்டம் அமலானால், பாரபட்சமான ஊதியம் தொடர்பாக, ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு, வாய்ப்பிருக்காது; நிறுவனங்களின் உற்பத்தியும் பாதிக்கப்படாது என, எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த திட்டத்திற்கு, தொழிற்சங்கங்கள் துவக்க நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|