பதிவு செய்த நாள்
07 ஆக2016
04:25
புதுடில்லி:மருந்துகள், அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட, கூடுதலாக விற்கப்படுவதை தடுக்க, ‘பார்கோடு’ தகவலில், சில்லரை விற்பனை விலையை சேர்ப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஒரு பொருளின் அனைத்து விபரங்களையும், அறிந்து கொள்ள பார்கோடு தொழில்நுட்பம் உதவுகிறது. எண்கள் மற்றும் கோடுகளுடன் காணப்படும் பார்கோடை, அதற்கென உள்ள, ‘பார்கோடு ரீடர்’ எனப்படும் கருவியை பயன்படுத்தி, ஒரு பொருளின் முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஏமாற்ற முடியாது:பல்பொருள் அங்காடிகளில், பார்கோடு முறையில் தான், பொருட்களுக்கு ரசீது தயாரிக்கப்படுகிறது. நாட்டின் மருந்து ஏற்றுமதியில், இந்த பார்கோடு முறை பின்பற்றப்படுகிறது. தற்போது, உள்நாட்டில், மருந்துகளின் சில்லரை விற்பனையிலும், பார்கோடை பயன்படுத்துவது குறித்து, மத்திய மருந்து துறை பரிசீலித்து வருகிறது. இதன் மூலம், மருந்து கடைக்காரர்கள், மருந்து அட்டையில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை மட்டுமே நுகர்வோரிடம் வசூலிக்க முடியும்.
வரிகளை உள்ளடக்கிய அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில், வரி உள்ளிட்ட இத்யாதி அம்சங்களை கூறி, ரசீது தராமல் நுகர்வோரை ஏமாற்ற முடியாது. மருந்து நிறுவனங்கள் நிர்ணயிக்கும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் கணினி, ‘சர்வர்’ மூலம் இணைக்கப்பட்டிருக்கும் என்பதால், விலை மாறுதல்களை உடனுக்குடன் அறிந்து, நடவடிக்கை எடுக்க முடியும். நுகர்வோர் சுரண்டப்படுவதையும், போலி மருந்துகளால் ஏமாறுவதையும் தடுக்க, இத்திட்டம் உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள இத்திட்டத்திற்கு துவக்க நிலையிலேயே, மருந்து கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘சிறிய நகரங்களில் உள்ள சாதாரண மருந்து கடைக்காரர்கள், பார்கோடு ரீடர் சாதனமின்றி எப்படி மருந்துகளின் விலையை அறிந்து, விற்க முடியும். அப்படிப்பட்ட நிலையில், மருந்துகளை விற்பனை செய்யவே முடியாத நிலை ஏற்படும்’ என, மருந்து விற்பனையாளர் தரப்பு தெரிவிக்கிறது.
அச்சம்:நாட்டின் பல பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதுபோன்ற சமயங்களில், பார்கோடை பயன்படுத்த முடியாமல், மருந்து விற்பனை பாதிக்கப்படும் என்றும், மருந்து கடைக்காரர்கள் அச்சப்படுகின்றனர். அவர்கள், இப்பிரச்னைகளை, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து கணினி வல்லுனர் ஒருவர் கூறுகையில், ‘ஸ்மார்ட் போனில், ‘க்யூ ஆர்கோடு ரீடர்’ அப்ளிகேஷன் மூலம் ஸ்கேன் செய்யும் வசதி, பரவலாகி விட்ட சூழலில், அதை, மருந்துகளுக்கும் பயன்படுத்தி, பிரச்னைக்கு தீர்வு காணலாம்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|