பதிவு செய்த நாள்
04 செப்2016
23:56
அரசு அறிவித்த தங்க திட்டங்களில், தங்க சேமிப்பு பத்திரங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் படிப்படியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை வெளியான நான்கு கட்ட பத்திரங்கள் மூலம் 2,240 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாவது கட்டமாக இவை வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, தங்க டிபாசிட் திட்டம், தங்க சேமிப்பு பத்திரங்கள் மற்றும் தங்க நாணய திட்டம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் தங்க சேமிப்பு பத்திரங்கள், நகை உள்ளிட்ட வடிவத்தில் தங்கத்தை வாங்குவதற்கு பதிலாக பத்திர வடிவில் வாங்குவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. வெளியீடு
அரசு சார்பில், ரிசர்வ் வங்கி தங்க சேமிப்பு பத்திரங்களை வெளியிட்டு வருகிறது. இவற்றில் முதலீடு செய்பவர்கள் முதிர்வு காலத்தில் அப்போதைய தங்க விலைக்கு ஏற்ப ரொக்கத்தை பெற்றுக்கொள்ளலாம். ஒரு கிராம் முதல் முதலீடு செய்யலாம். ஒருவர் அதிகபட்சமாக 500 கிராம் வரை பத்திரங்களை பெறலாம். முதலீடு செய்யப்படும் காலத்திற்கு 2.75 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. இது அரையாண்டு அடிப்படையில் வழங்கப்படும். வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் பங்குச்சந்தை மூலம் இவற்றை பெறலாம். பத்திரங்கள் வெளியிடப்பட்ட பிறகு பங்குச்சந்தையிலும் பரிவர்த்தனை செய்யலாம். தங்க சேமிப்பு பத்திரங்கள் ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை நான்கு கட்டமாக வெளியிடப்பட்டுள்ளன. தற்போது ஐந்தாவது கட்டமாக வெளியிடப்பட்டுள்ளன. செப்டம்பர், 1ம் தேதி இதற்கான விண்ணப்பங்கள் துவங்கியுள்ளது.
வரும் 9ம் தேதி வரை தங்க சேமிப்பு பத்திரங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். 23ம் தேதி இதற்கான பத்திரங்கள் வழங்கப்படும். இதற்கான விலை, கிராம் ஒன்றுக்கு, 3,150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்டமாக வெளியிட்டப்பட்ட பத்திரங்கள், கிராம் ஒன்றுக்கு 3,119 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தூய தங்கத்தின் விலை அடிப்படையில் இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
வரவேற்பு:இதுவரை வெளியிடப்பட்ட நான்கு கட்ட பத்திரங்கள் மூலம் 2,240 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. முதல் கட்ட பத்திரங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. அப்போது 246 கோடி ருபாய் திரட்டப்பட்டது. அண்மையில் வெளியிடப்பட்ட நான்காவது கட்டத்தின் போது, அதிகபட்சமாக, 919 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. இது, 2.95 டன் தங்கத்திற்கு நிகரானதாகும்.சில்லரை முதலீட்டார்கள் மத்தியில் இவற்றுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இரண்டாம் கட்ட வெளியீட்டிற்கு பிறகு, அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக வல்லுனர்கள் கருதுகின்றனர். திட்டம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பது இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும், அரசும் இந்த திட்டத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி குறைந்தபட்ச முதலீடு ஒரு கிராமாக குறைக்கப்பட்டு உள்ளது. கே.ஒய்.சி., நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன.
தங்கத்தின் விலை அதிகரித்து வருவது மற்றும் வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி குறைந்திருப்பதும் தங்க சேமிப்பு பத்திரங்கள் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தங்கத்தின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. தங்க சேமிப்பு பத்திரங்கள் திருமணம் போன்ற நிகழ்வுகளிலும் பரிசளிக்கும் வழக்கம் இருக்கிறது. பங்குச்சந்தை பரிவர்த்தனைபொதுவாக தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த பத்திரங்கள் ஏற்றதாக கருதப்படுகிறது. நகை வடிவில் முதலீடு செய்வதைவிட பத்திர வடிவ முதலீடு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. எனினும், முதிர்வு காலம் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் நீண்ட கால முதலீடாகவே இதை அணுக வேண்டும்.
எனினும், தங்க சேமிப்பு பத்திரங்களை பங்குச்சந்தையில் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பும் உள்ளது. எனவே, இடையில் வெளியேற விரும்பினால் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனினும், முதல் கட்ட பத்திரங்கள் பங்குச்சந்தையில் பரிவர்த்தனை துவங்கிஉள்ள நிலையில், பரிவர்த்தனை அளவு குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. பத்திரங்களை வாங்கியவர்கள் அதில் முதலீட்டை தொடர விரும்புவதன் அடையாளமாக இது கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|