பதிவு செய்த நாள்
10 செப்2016
07:36
புதுடில்லி : ‘குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், நிதி நெருக்கடியில் இருந்து மீள, குறுகிய கால அடிப்படையில், 5.15 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி தேவைப்படுகிறது’ என, ‘கிரிசில் – அசோசெம்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்: நாட்டில் செயல்பட்டு வரும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள், அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடுகள், பொருட்களை சந்தைப்படுத்துவதில் உள்ள சிரமம், போட்டியை சமாளிக்க, நவீன தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட பிரச்னைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உள்ளன.
இடர்ப்பாடுகள்இவற்றுக்கெல்லாம் மேலாக, அந்நிறுவனங்கள், கடுமையான நிதிநெருக்கடியில் உழல்கின்றன; நிதி திரட்டுவதே, அந்நிறுவனங்களின் தொடர் பணியாக உள்ளது.கடன் பெற, போதுமான பிணை வழங்க முடியாத நிலை, தொழில் குறித்து போதிய விபரம் தெரியாமல், கடன் வழங்கத் தயங்கும் நிறுவனங்கள் போன்றவற்றால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், கடன் திரட்டுவதிலும் இடர்ப்பாடுகளை சந்திக்கின்றன.இது தவிர்த்து, மந்தமான விற்பனையால், பொருட்கள் தேங்கி, நடைமுறை செலவினங்களை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. இந்த நிலையிலும், தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டி, இந்நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பதில், விட்டுக் கொடுத்து நடந்து கொள்கின்றன.
அதேசமயம், லாபமற்ற பொருட்களை தயாரிப்பது, சேவைகளை வழங்குவது போன்றவற்றிலும், அவசியமின்றி, கட்டடங்கள், வீடுகள், ஆடம்பர கார்கள் போன்றவற்றை வாங்குவதிலும், இந்நிறுவனங்கள் பணத்தை செலவிடுகின்றன.கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெருமளவு, ‘ஆர்டர்’ பெறுவதற்காக, விலையில் பேரம் பேசுவதை, இந்நிறுவனங்கள் தவிர்க்கின்றன. அதனால், வர்த்தகம் அதிகரித்த போதிலும், அதை பயன்படுத்திக் கொள்வதற்கான, நடைமுறை மூலதனத்தை திரட்ட முடியாமல் தடுமாறுகின்றன.
பிரச்னைகளை தீர்க்க...இதுபோன்ற பிரச்னைகள் அனைத்தையும் சமாளிக்க, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, நடுத்தர கால அடிப்படையில், 45 லட்சம் கோடி ரூபாய் தேவை. அதில், குறுகிய காலத்தில், 5.15 லட்சம் கோடி ரூபாய் தேவை என, மதிப்பிடப்பட்டுள்ளது.தொழில்நுட்பம் மூலம் செலவை குறைத்தல், குறுந்தொழில் முனைவோருக்கு, நிதி மேலாண்மை பயிற்சி வழங்குதல், பன்னாட்டு நிறுவனங்களின் கடனுதவி நடைமுறைகளை பின்பற்றுதல், மாற்று கடன் வழிமுறைகளை ஆராய்தல் போன்றவை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பிரச்னைகளை தீர்க்க துணை புரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|