பதிவு செய்த நாள்
12 செப்2016
00:35
வங்கியில் புதிதாக சேமிப்பு கணக்கு துவக்குவதாக இருந்தாலும் சரி, தற்போது கணக்கு வைத்துள்ள வங்கி சேவையில் அதிருப்தி அடைந்து வேறு வங்கிக்கு மாறுவதாக இருந்தாலும் சரி, சேமிப்பு கணக்கை துவக்கும் முன், அடிப்படையாக சில விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது.
வங்கிகள் பொதுவாக ஒரே விதமான செயல்பாட்டை கொண்டிருந்தாலும் அவை அளிக்கும் சேவைகள், வசூலிக்கும் கட்டணங்கள், அளிக்கும் சலுகைகள் மாறுபடலாம். இந்த அம்சங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு சேமிப்பு கணக்கை துவக்கும் வங்கியை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும்:
வட்டி விகிதம்: முதலில், சேமிப்பு கணக்கிற்கு வங்கி அளிக்கும் வட்டி விகிதம் என்ன என்பதை அறிய வேண்டும். பெரும்பாலான வங்கிகள், ஆண்டுக்கு, 4 சதவீத வட்டி வழங்குகின்றன. இதைவிட கூடுதலாக வட்டி அளிக்கும் வங்கிகளும் உள்ளன. கூடுதல் வட்டி தேவை எனில் இவற்றை நாடலாம்.
மினிமம் பாலன்ஸ்: வட்டி விகிதத்திற்கு அடுத்த படியாக அறிய வேண்டிய விஷயம், சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையின் அளவு என்ன என்பது. இது, ‘மினிமம் பாலன்ஸ்’ என குறிப்பிடப்படுகிறது. பொதுவாக பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகளில் இந்த தொகை அதிகமாக இருக்கலாம். ஸ்டேட் வங்கி, கனரா வங்கி போன்றவை குறைந்தபட்சம், 1,000 ரூபாய் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்கின்றன. எச்.டி.எப்.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., போன்ற வங்கிகளில் இது, 5,000 முதல் 10,000 ஆக இருக்கலாம். குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க விருப்பமில்லை எனில் அடிப்படை சேமிப்பு கணக்கு வசதியை நாடலாம். ஆனால், இதில் அதிக வசதிகள் இருக்காது. குறைந்தபட்ச தொகையை மட்டும் தெரிந்து கொண்டால் போதாது, அந்த தொகையை வைத்திருக்க தவறினால் அபராதம் எவ்வளவு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சேவையின் தரம்: வங்கி அளிக்கும் வாடிக்கையாளர் சேவை பற்றியும் விசாரித்து அறிய வேண்டும். பொதுவாக தனியார் வங்கிகளின் சேவை சிறப்பாக இருப்பதாக கருதப்பட்டாலும், இப்போது பொதுத்துறை வங்கிகளும் ஈடுகொடுத்து வருகின்றன. வங்கி அமைந்திருக்கும் இடம் வசிக்கும் வீடு அல்லது பணி புரியும் அலுவலகத்திற்கு அருகாமையில் இருப்பதும் நல்லது.
கட்டணங்கள்: வங்கி அளிக்கும் பலவேறு சேவைகளுக்கான கட்டண விகிதங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். புதிய காசோலை புத்தகம் வினியோகிக்க கட்டணம் உண்டா, லாக்கர் வசதிக்கான கட்டணம் என்ன போன்ற விஷயங்களை கவனிக்க வேண்டும்.
செயலிகள்: வங்கியின் இணைய சேவை, மொபைல் வங்கி வசதி போன்றவை குறித்தும் அறிந்து கொள்வது நல்லது. வங்கியின் செயலி குறித்தும் அறிந்து கொள்வது நல்லது. டிமெட் கணக்கு வசதி, காப்பீடு, மியூச்சுவல் பண்ட் ஆலோசனை போன்ற பிற சேவைகள் வழங்கப்படுகின்றனவா என்றும் கேட்டறிய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல், விண்ணப்ப படிவத்தில் பொடி எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களையும் மறக்காமல் கவனித்து முடிவெடுக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|