பதிவு செய்த நாள்
12 செப்2016
00:37
யு.பி.ஐ., மூலம், இந்தியா ரொக்கமில்லா பரிவர்த்தனையை நோக்கி வலுவான அடியை எடுத்து வைத்துள்ளது. நேஷனல் பேமன்ட் கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள இந்த வசதி, ஸ்மார்ட்போன்கள் மூலம், வங்கி பயனாளிகள், வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பவும், பணம் பெறவும் வழி செய்கிறது. பணம் செலுத்தவும் இதை பயன்படுத்தலாம். முதல் கட்டமாக, 21 வங்கிகள் இதில் இணைந்துள்ளன. மேலும், பல வங்கிகள் மற்றும் இ–காமர்ஸ் நிறுவனங்கள் இணைய உள்ளன.
என்ன சிறப்பு?ஏற்கனவே நெட் பேங்கிங் வசதி உள்ளது. டிஜிட்டல் வாலெட்கள் பல உள்ளன. இவைத்தவிர என்.இ.எப்.டி., மற்றும் ஆர்.ஜி.டி.எஸ்., உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. அப்படி இருக்க, யு.பி.ஐ., வசதியில் என்ன சிறப்பு என்று கேட்கலாம். தற்போதுள்ள பண பரிவர்த்தனை சேவைகளை விட, யு.பி.ஐ., எளிமையானது மற்றும் உடனடி தன்மை கொண்டதாக இருக்கிறது என்பதே பதில். இதன் மூலம் உடனடியாக வங்கி கணக்கில் இருந்து, வேறு ஒருவரின் வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை செய்யலாம். மற்ற முறைகளில் இதற்கு அவகாசம் தேவை. நெட் பேங்கிங் மூலம் பண அனுப்புவது கொஞ்சம் சிக்கலானது. பயனாளியின் விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். ஆனால், யு.பி.ஐ., மூலம், ஒரே கிளிக்கில் எளிதாக பணம் அனுப்பலாம்.
முக்கிய அம்சங்கள்* அதிக பட்சமாக, ஒரு லட்சம் ரூபாய் வரை அனுப்ப முடியும்* யு.பி.ஐ., 24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படக்கூடியது. ஞாயிறுக்கிழமைகள், விடுமுறை நாட்களிலும் பயன்படுத்தலாம் * எந்த வங்கியில் கணக்கு இருந்தாலும் இதை பயன்படுத்த முடியும். இதில் இணைந்துள்ள வங்கியின் யு.பி.ஐ.,செயலியை டவுண்லோடு செய்து, அதில் தங்கள் வங்கி கணக்கை இணைத்துக் கொள்ளலாம்* இந்த வசதியில் இணையாதவர்களுக்கும் வங்கி கணக்கு எண்ணை தெரிவித்து பணம் அனுப்பலாம்.
பாதுகாப்பு!யு.பி.ஐ., வசதியில் உள்ள முக்கியமான அம்சம், இ–மெயில் முகவரி போன்ற அடையாளத்தை உருவாக்கி கொண்டு பணம் அனுப்பலாம். வங்கி கணக்கு உள்ளிட்ட மற்ற எந்த விபரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். விர்ச்சுவல் பேமன்ட் அட்ரஸ் (வி.பி.ஏ.,) எனப்படும் அடையாளம் மூலம் இந்த சேவையை பயன்படுத்தலாம். பணப் பரிவர்த்தனையின் போது இதை மட்டுமே குறிப்பிட்டால் போதும் என்பதால் மிகவும் பாதுகாப்பானது. கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு எண்ணை எல்லாம் தெரிவிக்கும் அவசியம் இல்லை. டிஜிட்டல் வாலெட்கள் போல டெபிட் கார்டில் இருந்து பணத்தை இதில் பதிவேற்ற வேண்டிய அவசியமில்லை. இரண்டு அடுக்கு பாதுகாப்பு அம்சமும் கொண்டுள்ளது.
பயன்படுத்துவது எப்படி?முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் அல்லது வங்கிகளின் இணையதளங்களில் இருந்து யு.பி.ஐ., செயலியை நிறுவிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, பதிவு செய்த மொபைல் எண்ணை குறிப்பிட்டு, ஒரு முறை பாஸ்வேர்டை பெற்று, 4 இலக்க, ‘பின்’ எண்ணை உருவாக்கி கொள்ள வேண்டும். அடுத்த கட்டமாக, வி.பி.ஏ., எனும் விர்ச்சுவல் பேமன்ட் அட்ரசை உருவாக்கி கொள்ள வேண்டும். இது உங்கள் பெயராக அல்லது மொபைல் எண்ணாக கூட இருக்கலாம். இ–மெயில் முகவரி போல அமையக்கூடிய இதை கொண்டு தான் யு.பி.ஐ., வசதியை பயன்படுத்தலாம். அடுத்த கட்டமாக, உங்கள் வங்கி கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம். யு.பி.ஐ., செயலியை திறந்து அதில் உள்ள பணம் அனுப்பும் மற்றும் பணம் பெறும் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். பணம் வந்தால் எஸ்.எம்.எஸ்., போல செய்தி வரும். இதே போல பணம் அனுப்பவும் கோரிக்கை அனுப்பலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|