பதிவு செய்த நாள்
13 செப்2016
07:45
ஜெய்ப்பூர் : ‘‘மின்னணு வணிகத்தின் வளர்ச்சி, சிறிய அளவில் வியாபாரம் செய்வோரை பாதிக்காது,’’ என,மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: வலைதளம் வாயிலாக பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. இத்தகைய மின்னணு வணிகம் பரவலாகி வருவதால், சிறியளவில் வியாபாரம் செய்வோர் பாதிக்கப்படுவர் என, சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர். அது தவறு. வரும் நாட்களில், தெருமுனை வியாபாரமும், சிறிய கடைகளின் எண்ணிக்கையும் பெருகும். அதேசமயம், ‘சூப்பர் மார்க்கெட்’ போன்ற பெரிய கடைகளின் எண்ணிக்கை குறையும். அதனால், சிறிய வர்த்தகர்கள் பாதிக்கப்படுவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. உதாரணமாக, மின்னணு வணிகத்தில் உச்சகட்ட வளர்ச்சியை எட்டியுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், சிறிய கடைகள் அதிகரித்து வருகின்றன; பெரிய கடைகள் மூடப்படுகின்றன.
மின்னணு வணிகம் மற்றும் சூப்பர் மார்கெட் போன்றவற்றால், தங்கள் வர்த்தகம் பாதிக்கும் என, சிறிய வியாபாரிகள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மின்னணு வணிகத்தால், சிறிய வியாபாரிகள் தான் பயனடைவர். தெருமுனை வியாபாரமும், சிறிய கடைகளும் தொடர்ந்து இயங்கும். இங்கு, பெரிய கடைகளை விட, மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும். சூப்பர் மார்க்கெட் போன்ற பெரிய கடைகளில், பொருட்களுக்கு அதிகம் செலவழிக்க நேரும். வாகன நிறுத்தம், உணவு உள்ளிட்டவற்றுக்கு கூடுதலாக செலவாகும். ஆகவே, மின்னணு வணிகத்தால், சிறிய வர்த்தகர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
நாடு சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளாகியும், இன்னும், 20 – 22 கோடி மக்களுக்கு மின் வசதி கிடைக்காத நிலை உள்ளது. இந்திய குடும்பங்கள் ஒவ்வொன்றும், மின் வசதி பெற வேண்டும் என்ற இலக்குடன், மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வரும் ஆண்டுகளில், நிலக்கரி ஏலம் மூலம், கிழக்கு மாநிலங்களுக்கு, 3.25 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும். இத்தொகை, பொதுமக்கள் நல்வாழ்விற்கும், பொது சேவைகளுக்கும் பயன்படுத்தப்படும்.
சமூக சேவைக்கான வழிகளில், அரசியலும் ஒன்று. ஆனால், நல்லவர்கள் அரசியலுக்கு வருவதில்லை; அரசியல் குறித்த சமூக கண்ணோட்டம் மாற வேண்டும். கோடிக் கணக்கான மாணவர்களுக்கு, நல்ல கல்வி கிடைப்பதில்லை; அப்படியே கிடைத்தாலும், அவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டு, பண்ணை வேலைகளுக்கு செல்கின்றனர். இது போன்ற நிலையை தவிர்க்க, மக்கள் சமூகம் தீவிர அரசியலில் பங்கேற்று, ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு உதவ வேண்டும்; அதற்கான ஆற்றலும், நேர்மையும், சமூகத்திடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|