பதிவு செய்த நாள்
16 செப்2016
07:26
பிராங்பர்ட் : ‘கடந்த சில ஆண்டுகளாக, மந்த கதியில் இருந்த இந்திய சிமென்ட் துறை, பருவமழை பொழிவு, தேவை அதிகரிப்பு போன்றவற்றால், புத்துயிர் பெறத் துவங்கியுள்ளது. இதனால், சிமென்ட் நிறுவனங்களின் லாப வரம்பு உயர்ந்து வருகிறது’ என, ஜெர்மனியைச் சேர்ந்த டைய்சு பாங்க் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் விபரம்: இந்திய சிமென்ட் துறை, கடந்த சில ஆண்டுகளாக மந்த கதியில் இருந்து வந்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நிலவிய வறட்சி, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் மலிவு விலை சிமென்ட் இறக்குமதி, அரசு திட்டங்களில் தேக்கம், கட்டுமான துறையில் ஏற்பட்டிருந்த தொய்வு போன்றவற்றால், சிமென்ட் நிறுவனங்களின் வருவாய் சரிவடைந்தது. இந்நிலையில், இந்தாண்டு, ஜூன் முதல் செப்., 11 வரையிலான காலத்தில், நாடு முழுவதும், 95 சதவீத அளவிற்கு பருவமழை பெய்துள்ளதால், சிமென்ட் தேவை, 2 – 4 சதவீதம் அதிகரித்துள்ளது; இது, அடுத்த ஆறு மாதங்களில், 9 சதவீதம் வளர்ச்சி காணும்.
இரண்டாவதாக, நாடு முழுவதும் சாலைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதும், சிமென்ட் தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது. அதேசமயம், மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் தவிர்த்து, பெரும்பான்மையான பிராந்தியங்களில், சிமென்ட் விலையின் ஏற்ற, இறக்கம், 2 – 4 சதவீத அளவிற்கு கட்டுக்குள் உள்ளது. சமீபகாலமாக, சிமென்ட் துறையில், புதிய நிறுவனங்கள் எதுவும் களமிறங்கவில்லை. செயல்பட்டு வரும் நிறுவனங்களும், சிமென்ட் உற்பத்தி திறனை, குறைந்த அளவிற்கே உயர்த்தியுள்ளன. இது, சிமென்ட் தேவைக்கும், அளிப்பிற்கும் உள்ள இடைவெளியை குறைத்து, சிமென்ட் நிறுவனங்களின் லாப வரம்பை உயர்த்த உதவி புரிந்து வருகிறது.
பருவமழை காலம் முடிந்த பின், சிமென்டிற்கான தேவை மேலும் அதிகரிக்கும். குறிப்பாக, அடுத்த அரையாண்டில், கிராமப்புறங்கள், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், குடியிருப்பு கட்டுமான பணிகள் சூடுபிடிக்கும். அப்போது, சிமென்டிற்கான தேவை அதிகரிக்கும் என்பதால், விலை உயர்வும், தயாரிப்பு நிறுவனங்களின் வருவாயும் பெருக வாய்ப்புள்ளது. இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், முதலீட்டாளர்கள், சிமென்ட் நிறுவன பங்குகளை அதிக அளவில் வாங்கி வருகின்றனர். குறிப்பாக, இந்தியா சிமென்ட்ஸ், அம்புஜா சிமென்ட்ஸ், ஏ.சி.சி., அல்ட்ரா டெக் சிமென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை, 1 – 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், சிமென்டிற்கான தேவை, 7 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|