பதிவு செய்த நாள்
02 நவ2016
02:48
புதுடில்லி : இயற்கை எரிவாயு விதிமீறல் புகார் தொடர்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு, 6,700 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., நிறுவனம், கிருஷ்ணா – கோதாவரி எண்ணெய் படுகையில், தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், இயற்கை எரிவாயுவை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உறிஞ்சியதாக, குற்றஞ்சாட்டி உள்ளது. இதை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மறுத்துள்ளது.
இதையடுத்து, இப்புகாரை விசாரிக்க, டில்லி ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ஏ.பி.ஷா தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, ஓ.என்.ஜி.சி.,க்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, அதன் எரிவாயு விற்பனையில் ஈட்டிய தொகை அல்லது அதில் கிடைத்த லாபத்தின் அடிப்படையில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கலாம் என, பரிந்துரைத்தது.
அதனடிப்படையில், ரிலையன்சுக்கு விதிக்க வேண்டிய அபராதம் குறித்த விபரங்களை, நீரகக் கரிமங்கள் தலைமை இயக்குனரகம் தயாரித்து, மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திடம் அளித்து உள்ளது.
அந்த அறிக்கையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு, 100 கோடி டாலர், அதாவது, 6,700 கோடி ரூபாய் அபராதம் விதிக்க, பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, இவ்வார இறுதியில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|