பதிவு செய்த நாள்
03 டிச2016
04:25
மும்பை:‘மத்திய அரசின், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், பெரும்பான்மையான சில்லரை வர்த்தகம், வரும் மாதங்களில், ‘எம் – காமர்ஸ்’ எனப்படும், மொபைல் போன் சார்ந்த வர்த்தகத்திற்கு மாறும்’ என, சி.ஐ.ஐ., கிராண்ட் தார்ன்டன் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அதன் விபரம்:மொபைல் போன் மூலம், பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவது, எம் – காமர்ஸ் எனப்படுகிறது. வலைதளம் வாயிலான விற்பனையில், 60 சதவீதம், மொபைல் போன் மூலம் நடைபெறுகிறது. அதில், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் பங்களிப்பு,30 – 50 சதவீதமாக உள்ளது.
தற்போது, குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்கள் கிடைப்பதால், அவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது, மொபைல் போன் வாயிலான வர்த்தகம் பெருக துணை புரிந்துள்ளது. இந்தியாவில், 29.20 கோடி பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர்.
அது போல, மொபைல் போனில் இணையத்தை பயன்படுத்துவோரும் அதிகரித்து வருகின்றனர். தற்போது, 37.10 கோடி பேர், மொபைல் போனில் இணையத்தை பயன்படுத்துகின்றனர். அதனால், மொபைல் போன் வாயிலான வர்த்தகம், மிகச் சிறப்பாக வளர்ச்சி காணும். இது, ரொக்கப் பரிமாற்றம் இல்லாத அல்லது குறைந்த ரொக்கப் பரிமாற்றம் உள்ள சமூகத்தை உருவாக்கும். மொபைல் போனில், வணிகர் – நுகர்வோர் இடையே, சுலபமான பணப்பரிமாற்றத்திற்கு, ‘இ – வாலெட்’ எனப்படும், மின்னணு பணப் பைகள் உதவுகின்றன.
பலர், தங்கள் வங்கிக் கணக்கு விபரங்களை, வணிகர்களிடம் பகிரவோ அல்லது, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவோ அச்சப்படுவர். அத்தகையோர், எவ்வித விபரங்களையும் அளிக்காமல், மொபைல் போனில் சுலபமான பரிவர்த்தனைக்கு உதவும், மின்னணு பணப் பைகளை பயன்படுத்தவே விரும்புவர்; இது, எம் – காமர்ஸ் துறை வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|