பதிவு செய்த நாள்
04 டிச2016
05:11
புதுடில்லி:இந்தியாவைச் சேர்ந்த, 14 நிறுவனங்களின் அரிசி இறக்குமதிக்கு, சீனா அனுமதி அளித்துள்ளது. சீன அரசு, இந்திய அரிசியில் பூச்சி தாக்குதல் உள்ளதாக கூறி, அதன் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் நடவடிக்கையால், சீன தரக் கட்டுப்பாட்டு அமைப்பினர், செப்டம்பரில் இந்தியா வந்தனர். அவர்கள், இந்திய தேசிய பயிர் பாதுகாப்பு அமைப்பில் பதிவு செய்துள்ள, 26 அரிசி ஆலைகளை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, கே.ஆர்.பி.எல்., பெஸ்ட் புட்ஸ், சர்வேஸ்வர் புட்ஸ் உள்ளிட்ட, 14 நிறுவனங்கள், அரிசி ஏற்றுமதி மேற்கொள்ள, சீன அரசு, முதன்முறையாக, தரச் சான்று வழங்கியுள்ளது. இது குறித்த தகவலை, சீன அரசு, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. அரிசி உட்பட, பண்ணைப் பொருட்கள் ஏற்றுமதி குறைந்து வரும் சூழலில், சரியான தருணத்தில், சீன அரசின் அனுமதி கிடைத்திருப்பது, ஏற்றுமதி நிறுவனங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் பாசுமதி அரிசி மற்றும் அரிசி ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 1.05 கோடி டன்னாக இருக்கும் என, சர்வசேத தானிய குழு மதிப்பிட்டு உள்ளது. இந்நிலையில், சீன அரசின் நடவடிக்கையால், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி, மதிப்பீட்டை விட அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அரிசியின் பங்களிப்பு:
நாட்டின் மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், அரிசியின் பங்களிப்பு, 18 சதவீதமாக உள்ளது. கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், அரிசி ஏற்றுமதி, 579 கோடி டாலராக குறைந்தது. இது, முந்தைய, 2014 – 15ம் நிதியாண்டில், 784 கோடி டாலராக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|