பதிவு செய்த நாள்
25 ஜன2017
23:38
புதுடில்லி : இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில், உள்நாட்டு நிறுவனங்களை விஞ்சி, சீன நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாக, ‘கவுன்டர்பாயின்ட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: கடந்த, 2016 அக்., – டிச., வரையிலான காலாண்டில், ஸ்மார்ட் போன் விற்பனை, முந்தைய காலாண்டை விட, 17.8 சதவீதம் குறைந்து, 2.89 கோடியாக சரிவடைந்து உள்ளது. அதே சமயம், 2015ம் ஆண்டின் இதே காலாண்டில், 2.53 கோடி ஸ்மார்ட் போன்களின் விற்பனையோடு ஒப்பிடும் போது, 14.22 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது.ஒட்டுமொத்த ஸ்மார்ட் போன் விற்பனையில், சீன நிறுவனங்களின் பங்களிப்பு, 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஸ்மார்ட் போன் விற்பனையில், ‘டாப் – 5’ல், முதன்முறையாக, இந்திய நிறுவனம் ஒன்று கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம், 24 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த நான்கு இடங்களிலும், சீனாவைச் சேர்ந்த, விவோ, ஜியோமி, லெனோவா, ஒப்போ ஆகியவை தான் உள்ளன. அமெரிக்காவின் ஆப்பிள் ஸ்மார்ட் போன், 10வது இடத்தில் உள்ள போதிலும், ‘பிரீமியம்’ பிரிவில், 62 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.பண மதிப்பு நீக்க நடவடிக்கை, உள்நாட்டு ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீன நிறுவனங்கள், பிரத்யேக கொள்கை திட்டங்கள், தாராளமான விளம்பர செலவுகள் போன்றவற்றின் மூலம், நாடு முழுவதும் வர்த்தகத்தை தீவிரமாக விரிவுபடுத்தி வருகின்றன. இதன் காரணமாக, இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில், சீன நிறுவனங்களின் பங்களிப்பு, ஒரே ஆண்டில், 14 சதவீதத்தில் இருந்து, 46 சதவீதமாக உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டு, ஸ்மார்ட் போன் விற்பனை, உள்நாட்டில், 18 சதவீதம்; உலகளவில், 3 சதவீதம் என்றளவில் அதிகரித்து உள்ளது.
உள்நாட்டு ஸ்மார்ட் போன் விற்பனையில், சாம்சங், 25 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், மைக்ரோமேக்ஸ், லெனோவா, இன்டெக்ஸ், ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை உள்ளன. ஆப்பிள் போன் விற்பனை, 25 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், 8.30 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. மதிப்பீட்டு காலாண்டில் விற்பனையான ஸ்மார்ட் போன்களில், 75 சதவீதம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு, அக்., – டிச., வரையிலான காலாண்டில், மொபைல் போன் விற்பனை, 6.65 கோடியாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 6.01 கோடியாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|