பதிவு செய்த நாள்
17 மார்2017
23:48
தமிழக பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை வரவேற்றுள்ள தொழில் துறையினர், முதலாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டு ஒப்பந்தங்கள் என்ன ஆயிற்று; நிதிப் பற்றாக்குறையை, எப்படி சமாளிக்கப் போகிறோம் என, கேள்வி எழுப்பிஉள்ளனர்.
மெட்ராஸ் தொழில் வர்த்தக சபையான, எம்.சி.சி.ஐ., துணைத் தலைவர் காயத்ரி ஸ்ரீராம்: சரக்கு மற்றும் சேவை வரி அமலாகவுள்ள நிலையில், எதிர்பார்த்தபடியே, புதிய வரி விதிப்புகள் இல்லை. எனினும், கடந்த பட்ஜெட்டில் அறிவித்து, துவக்கப்படாத பல திட்டங்களை, செயல்படுத்துவது மிகவும் முக்கியம். மின் துறை, கட்டமைப்பு போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு திருப்தியாக இருந்தாலும், எண்ணுார் – மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம், மதுரவாயல் மேம்பாலத் திட்டம் போன்ற, தாமதமாகி வரும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
நிதிப் பற்றாக்குறையும் பெரும் கவலை தருவதாக உள்ளது. இதிலிருந்து, அரசு எப்படி மீளப் போகிறதோ தெரியவில்லை. இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு நடக்கும் என, அறிவித்திருப்பது மகிழ்ச்சி. எனினும், முதலாவது மாநாட்டு ஒப்பந்தங்கள் என்ன ஆயிற்று என்பதை, அறிவிப்பது அவசியம். ஒற்றை சாளர முறையில் அனுமதி என்பது, நடைமுறையில் ஏற்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். தொழில் துறையினருடன் அடிக்கடி பேச வேண்டும்.
சி.ஐ.ஐ., எனும், இந்திய தொழில் கூட்டமைப்பு, தமிழக தலைவர் ரவிச்சந்திரன்: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களுக்கு, 1,400 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது சிறப்பு. மெட்ரோ ரயில் விரிவாக்கம், கட்டமைப்பு வசதிக்கு, அதிக நிதி ஒதுக்கீடு, ஒற்றை சாளர முறை பலப்படுத்துதல் போன்றவற்றை வரவேற்கிறோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிக்கு, 150 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், கிண்டி சிறு தொழில் பேட்டை சங்கத் தலைவர் கனகாம்பரம், தேசிய சிறுதொழில் கூட்டமைப்பு துணைத் தலைவர் ஆர்.ரவி ஆகியோர், பட்ஜெட்டில் சிறு, குறுந்தொழில்களுக்கு, 532 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு, பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|