பதிவு செய்த நாள்
19 மார்2017
03:51
மும்பை : ‘நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டின், ஏப்., – ஜன., வரையிலான, 10 மாதங்களில், மத்திய அரசின் மானியம் மற்றும் வரி வருவாய் உயர்ந்ததால், தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள், திட்டச் செலவுகளை குறைக்காமல், சமாளித்துள்ளன’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், தமிழகம், கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம்,பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர்ஆகிய எட்டு மாநிலங்களின், தணிக்கை செய்யப்படாத மாதாந்திர நிதி நிலை அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.அதன் விபரம்:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஆய்வுக்குஎடுத்துக் கொள்ளப்பட்ட எட்டு மாநிலங்களின் பங்களிப்பு, 50 சதவீதத்திற்கு நெருக்கமாக உள்ளது. 2016 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், இம்மாநிலங்களுக்கு, ஒருசில துறைகளில் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.குறிப்பாக, முத்திரைத்தாள் விற்பனை, பத்திரப்பதிவுநில வரி ஆகியவற்றில் வருவாய் குறைந்துள்ளது.அதே சமயம், விற்பனை வரி வருவாய் உயர்ந்துள்ளது. அத்துடன், மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் மானியங்களும் அதிகரித்துள்ளன. அதனால், மதிப்பீட்டு காலத்தில், இம்மாநிலங்கள் திட்டச் செலவினங்களை குறைக்காமல், சமாளித்துள்ளன.அதே சமயம், மின் வினியோக சீரமைப்புக்கு நிதியுதவி வழங்கும், மத்திய அரசின், ‘உதய்’ திட்டத்தில், இம்மாநிலங்கள் இணைந்துள்ளதால், அவற்றின் மூலதனச் செலவினங்களும், கடன்களுக்கான ஒதுக்கீடுகளும் உயர்ந்துள்ளன.மதிப்பீட்டு காலத்தில், அவற்றின் வருவாய் செலவினம்,12 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், மூலதனச் செலவினம், 16 சதவீதம் அதிகரித்து உள்ளது.இதன் காரணமாக, மதிப்பீட்டு காலத்தில், இம்மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை, 92,270 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 66,690 கோடி ரூபாயாக இருந்தது.இம்மாநிலங்களின் வளர்ச்சி திட்ட கடன், இதே காலத்தில், 26,472 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும், மாநிலங்களின் வருவாய், 12 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு, மத்திய அரசின் மானியங்கள், 36 சதவீதம் அதிகரித்து, 23,658 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதும், மாநிலங்களின் வரி வருவாய், 26 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்திருப்பதும், முக்கிய காரணங்களாகும்.இதே காலத்தில், மாநிலங்களின் வரி சாரா வருவாய், 16 சதவீதம்; வரி வருவாய், 9சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவும், மாநிலங்களால்,திட்டச் செலவுகளை குறைக்காமல், சமாளிக்க முடிந்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|