பதிவு செய்த நாள்
07 ஜூன்2017
04:11
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த வங்கிகள், 2019 மார்ச்சுக்குள், ‘பேசல் 3’ விதிமுறையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அவை மூலதனத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்றன.இதையடுத்து, பொதுத் துறை வங்கிகள், கடன் பத்திரங்களை வெளியிடுவது; பங்குகளை விற்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில், நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளன. இந்த வகையில் 58 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, இந்த நிதியாண்டில், பங்குச் சந்தைகள் மூலமாக திரட்ட, அவை திட்டமிட்டு உள்ளன.இந்திர தனுஷ் திட்டத்தின்படி, பொதுத் துறை வங்கிகள், பேசல் 3 திட்டத்தை எதிர்கொள்ளும் வகையில், 1.10 லட்சம் கோடி ரூபாயை, பங்குச் சந்தைகள் மூலமாக திரட்ட வேண்டிய நிலையில் உள்ளன.இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, இந்த நிதியாண்டின் இறுதிக்குள் திரட்ட திட்டமிட்டு வருகிறது. தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகளை விற்பதன் மூலமாக, இந்த நிதியை, எஸ்.பி.ஐ., திரட்டும் என, தெரிகிறது. முதற்கட்டமாக, 11 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டுகிறது.இதே போல், பேங்க் ஆப் பரோடா, 6,000 கோடி ரூபாயையும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, 6,500 கோடி ரூபாயையும், பங்குகளை விற்பதன் மூலம் திரட்ட திட்டமிடுகின்றன.ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், ஐ.டி.பி.ஐ., பேங்க் ஆகியவை, தலா, 5,000 கோடி ரூபாயை திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளன. நடப்பு நிதியாண்டில், பேங்க் ஆப் இந்தியா, 4,950 கோடி ரூபாயை திரட்ட உள்ளது. கனரா வங்கி, 1,250 கோடி ரூபாயை, கடந்த நிதியாண்டில் ஏற்கனவே திரட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|