பதிவு செய்த நாள்
10 ஜூன்2017
06:47
புதுடில்லி : ‘‘அடுத்த, 5 – 6 ஆண்டுகளில், பாரம்பரிய வங்கி நடைமுறைகளை, ‘ஆன்லைன்’ வங்கி துறை அழிக்க வாய்ப்பு உள்ளது,’’ என, ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் எச்சரித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: என் மதிப்பீட்டின் படி, அடுத்த, 5 – 6 ஆண்டுகளில், பாரம்பரிய வங்கி நடைமுறைகளின் அழிவை பார்க்கலாம். இவ்வங்கிகளின் செலவினம் அதிகம் என்பதால், அவை நிலைத்திருப்பது கடினம். இந்தியாவில் தற்போது, நிதி தொழிற்நுட்ப சேவையில், 900க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன. இவை, ஆண்டுக்கு, 300 கோடி டாலர் டிபாசிட்டை ஈர்க்கின்றன.
போட்டி:
இத்தகைய நிதிச் சேவை நிறுவனங்கள், பாரம்பரிய வங்கிகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளன. இந்நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, பாரம்பரிய வங்கிகளின் செலவினம் பல மடங்கு அதிகமாக உள்ளது. தகவல்களை அலசி ஆராயும் ஆற்றல் காரணமாக, நிதி தொழிற்நுட்ப, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களால், மிக சுலபமாக கடன் வழங்க முடிகிறது.
இதற்கெல்லாம் மூலாதாரமாக, வலைதள தொழிற்நுட்பம் உதவுகிறது. இந்த வசதி மூலம், இந்தியா, மிக எளிமையான நடைமுறைகளை கண்டு பிடித்து, அமெரிக்க தொழிற்நுட்பத் துறையை விட, பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால், இந்தியாவில், 1 டாலர் செலவில் ஒரு வாடிக்கையாளரை ஈர்க்க முடிகிறது. இது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், 28 – 30 டாலராக உள்ளது.
மொபைல் போன் பயன்பாடும், வலைதளம் வாயிலான பரிமாற்றங்களும் பெருகி வருவதால், நிதி தொழிற்நுட்ப நிறுவனங்கள், மிக சுலபமாக ஒருவரின் கடன் தகுதி சார்ந்த தகவல்களை ஆராய்ந்து முடிவெடுக்கின்றன. நமக்கு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தும் வல்லமையும், தகவல்களை ஆராயும் திறனும், கிராமங்களில் நிதிச் சேவைகளை பரவலாக கொண்டு போகும் ஆற்றலும் உள்ளது. இவை தான், நிதிச் சேவை தொழிற்நுட்ப நிறுவனங்கள், வலைதளம் சார்ந்த வங்கி சேவைகளை சிறப்பாக மேற்கொள்ள உதவுகின்றன. இந்த பலம் தான், புதிய நிறுவனங்களை, வங்கி சேவைக்கு ஈர்க்கிறது.
உரிமம்:
கடந்த, 45 ஆண்டுகளில், பாரம்பரிய வங்கிகளை திறக்க, 28 உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன. தற்போது, 18 மாதங்களில், ‘பேமென்ட் பேங்க் – ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’ எனப்படும், வரையறைக்கு உட்பட்ட இரு வகையான வங்கி சேவைகளை வழங்க, 21 உரிமங்கள் வழங்கப்பட்டு உள்ளன.அவற்றில், ‘பார்தி ஏர்டெல், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க், பேடிஎம்’ ஆகியவை, பேமென்ட் பேங்க் பிரிவின் கீழ் வங்கி சேவையை துவக்கிவிட்டன. ‘எக்விடாஸ், உஜ்ஜிவன்’ உள்ளிட்ட, 11 நிதி நிறுவனங்கள், ஸ்மால் பைனான்ஸ் பேங்க் பிரிவில் களமிறங்கி உள்ளன.
இது போன்ற, நிதி தொழிற்நுட்ப நிறுவனங்களின் வருகையும், வலைதளம் மூலம் குறைந்த செலவில் சுலபமாக மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனை வசதிகளும், வரும் ஆண்டுகளில், பாரம்பரிய வங்கி துறைக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|