பதிவு செய்த நாள்
12 ஜூன்2017
04:13
ரிசர்வ் வங்கியின் சமீப வட்டி கொள்கை, அதன் சுயேச்சையான நடத்தைக்கு சிறந்த சான்று. ஆனாலும், தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் கொள்கையின் மேல் அரசின் கூர்ந்த கவனம் இருந்து கொண்டே இருக்கும்.
ரிசர்வ் வங்கியின் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்ற தங்களது எதிர்பார்ப்பை, வங்கியின் ஆளுனருக்கு தனிப்பட்ட முறையிலும், பொதுவெளி அறிவிப்புகள் மூலமும், நிதியமைச்சகமும், தலைமை பொருளாதார ஆலோசகரும் தொடர்ந்து அறிவுறுத்தும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.வட்டி விகிதத்தில், என்ன மாற்றம் ஏற்பட வேண்டும்; வங்கிகளின் மேல், ரிசர்வ் வங்கி செலுத்தும் மேலாண்மை மற்றும் சீரமைப்பு எப்படி அமைய வேண்டும் என்பதில் தொடர்ந்து கருத்து பரிமாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும். இந்த பரிமாற்றங்கள் ஆரோக்கியமானது என்றாலும், இதை, அதிகார பார்வையில்தான் பொருளாதார நிபுணர்கள் பார்க்கின்றனர். முதலீட்டு உலகமும் அப்படி பார்ப்பதுதான் வழக்கம்.
முரண்கள்
அரசு வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பொதுவெளியில் எடுத்த சூழலில், ரிசர்வ் வங்கி அதற்கான சூழல் இன்னும் ஏற்படவில்லை என்ற முடிவை எடுத்திருப்பது, ரிசர்வ் வங்கியின் சுதந்திர போக்கையும், நம் நாட்டு பொருளாதார அமைப்பின் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது. வட்டி விகிதத்தை குறைத்தால், அது பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்பது அரசின் நிலைப்பாடு. ஆனால், வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவு, பணவீக்கத்தின் மீது என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்பதே இந்த முடிவை நிர்ணயிக்கும் என்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பான விளக்கம். அது ரிசர்வ் வங்கியின் முன்னுரிமையும் கூட. ஆனாலும், தான் எடுக்கும் முடிவை, எதன் அடிப்படையில் எடுத்தது என்பதை ரிசர்வ் வங்கி, முடிவை அறிவித்தவுடனேயே தெளிவுபடுத்துகிறது.
அரசும் தன் தரப்பு கருத்தை உடனடியாக பொதுவெளியில் முன்வைக்கிறது. இதில் முரண்கள் வெளிப்படுவதை வைத்து, இருதரப்புக்கும் மோதல் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில், ஒரு தரப்பு நிலைப்பாடு சரி என்ற சூழல் பிறகு ஏற்பட்டால், மறுதரப்பு அதை ஏற்பதும் தொடர் நடவடிக்கை எடுப்பதும் நம் நாட்டின் நிதி மேலாண்மையின் தனிச் சிறப்பு. இந்தப் போக்கு, ரிசர்வ் வங்கியின் தன்னிச்சையான செயல்பாட்டின் வெளிப்பாட்டிற்கு வழி வகுக்கிறது. இது, ரிசர்வ் வங்கி ஒரு சுதந்திர அமைப்பு என்பதற்கு சான்றும் கூட. இந்தமுறை வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. ஆனால், பணவீக்கம் குறைந்து இருப்பதும், அது உடனடியாக மீண்டும் தலைதுாக்கும் சூழல் இல்லை என்பதும் ரிசர்வ் வங்கியின் தெளிவான கணிப்பு. வரும் மாதங்களில் பருவமழை சீராக, நாடு தழுவி பெய்யும் சூழலில் ரிசர்வ் வங்கி தன் பணவீக்க எதிர்பார்ப்பை உறுதி செய்து கொள்ளும். அந்த சூழலில், வட்டி விகித குறைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நம்பிக்கை
சந்தை இதை தெளிவாக உணர்ந்துள்ளது. ஆகவே, ரிசர்வ் வங்கியின் முடிவு அரசுக்கு மட்டுமே ஏமாற்றம் தந்தது. சந்தைக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. சந்தை இந்த ஆண்டு வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. வரும் வாரங்களில், சந்தை பருவமழையின் போக்கையே கூர்ந்து கவனிக்கும். உலக சந்தையின் நிகழ்வுகளின் பாதிப்பும் நம் சந்தையில் தொடர்ந்து வெளிப்படும். ஜி.எஸ்.டி., அமலுக்கு வர சில வாரங்களே உள்ள நிலையில், இந்த மாதம் பொருளாதாரம் சற்றே மந்தமாகவே இருக்கும். இருந்தும், முதலீட்டாளர்கள் நம் சந்தை மீது காட்டும் அபரிமிதமான நம்பிக்கை தொடரும் என்றே தோன்றுகிறது. சந்தை, உடனடி பொருளாதார நிகழ்வுகளை புறம் தள்ளிவிட்டு, பெரிய மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|