பதிவு செய்த நாள்
15 ஜூன்2017
23:53
கொச்சி : இந்தியா, கடந்த நிதியாண்டில், 17,664.61 கோடி ரூபாய் மதிப்புள்ள, 9,47,790 டன் மசாலா மற்றும் மசாலா பொருட்களை ஏற்றுமதி செய்து, புதிய சாதனை படைத்துள்ளது.
இது குறித்து, வாரியம் வெளியிட்டு உள்ள அறிக்கை விபரம்: கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், மிளகாய் வற்றல், இலவங்கம், ஏலக்காய், மிளகு உள்ளிட்ட மசாலா வகைகள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 12 சதவீதம் அதிகரித்து, 9,47,790 டன்னாக உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பில், 9 சதவீதம் உயர்ந்து, 17,664.61 கோடியாக அதிகரித்துள்ளது.
சீரகம்:
முந்தைய, 2015 – 16ம் நிதியாண்டில், 16,238.23 கோடி ரூபாய் மதிப்பிலான, 8,43,255 டன் மசாலா வகைகள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மசாலா வகைகள் ஏற்றுமதியில், மிளகாய் வற்றல், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில், சீரகம் உள்ளது.கடந்த நிதியாண்டில், 5,070.75 கோடி ரூபாய் மதிப்பிலான, 4,00,250 டன் மிளகாய் வற்றல் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டதை விட, மதிப்பு மற்றும் அளவு அடிப்படையில், முறையே, 27 மற்றும் 15 சதவீதம் உயர்வாகும்.
இதே காலத்தில், 1,963.20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,19,000 டன் சீரகம் ஏற்றுமதியாகி, மதிப்பு மற்றும் அளவு அடிப்படையில், முறையே, 28 மற்றும் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. சீரகம் இறக்குமதி செய்யும் நாடுகள், தரக் கட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, வாரியம் கட்டாய தரச் சோதனை நடைமுறையை அமல்படுத்தியது. இதனால், சீரகம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
மஞ்சள்:
மருந்து தயாரிப்பில் மஞ்சள் அதிகம் பயன்படுத்தப்படுவதால், சர்வதேச சந்தையில் அதற்கான தேவை பெருகி வருகிறது. கடந்த நிதியாண்டில், 1,241 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,16,500 டன் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. பெருஞ்சீரகம் ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், முறையே, 129 மற்றும் 79 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே போல, வெள்ளைப் பூண்டு ஏற்றுமதி, முறையே, 39 மற்றும் 92 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜாதிக்காய் மற்றும் ஜாதிப்பத்திரி ஏற்றுமதி, 25 சதவீதம் உயர்ந்து, 4,050 டன்னில் இருந்து, 5,070 டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில், சிவரிக் கீரை ஏற்றுமதி, 5,310 டன்னில் இருந்து, 6,250 டன்னாக உயர்ந்துள்ளது. கடுமையான உணவு பாதுகாப்பு விதிமுறைகள் தான், சர்வதேச விளைபொருட்கள் வர்த்தகத்தை தீர்மானிக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறந்த மண் வளம்:
வடகிழக்கு பிராந்தியத்தில், ஏலக்காய் விளைச்சலுக்கு ஏற்ற சிறந்த மண் வளம் உள்ளது. அதனால், அந்தபிராந்தியத்தில் ஏலக்காய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக, ஏலக்காய் ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், முறையே, 30 மற்றும் 9 சதவீதம் உயர்ந்துள்ளது.
-ஏ.ஜெயதிலக், தலைவர், இந்திய மசாலா பொருட்கள் வாரியம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|