பதிவு செய்த நாள்
20 ஜூன்2017
23:43
மும்பை : மும்பை பங்குச் சந்தை, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு என, 2012 மார்ச்சில், எஸ்.எம்.இ., என்ற பங்குச் சந்தை பிரிவை அறிமுகப்படுத்தியது.
அது முதல், 214 நிறுவனங்கள், இப்பிரிவில் புதிய பங்கு வெளியீட்டிற்காக விண்ணப்பித்து உள்ளன. அவற்றில், 183 நிறுவனங்கள், பங்கு வெளியீடு மேற்கொண்டு, 1,440 கோடி ரூபாய் திரட்டிக் கொண்டன. இந்நிறுவனங்களின் தற்போதைய சந்தை மூலதனம், 18,832 கோடி ரூபாயாக உள்ளது. எஸ்.எம்.இ., பிரிவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், 23 நிறுவனங்கள், மும்பை பங்குச் சந்தைக்கு மாறி உள்ளன. விரைவில், 23 நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் இறங்க உள்ளன.
இது குறித்து, மும்பை பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசியாவின் பழமையான மும்பை பங்குச் சந்தை, இந்தியாவில் முதன்முதலாக, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு என, எஸ்.எம்.இ., சந்தையை, ஐந்து ஆண்டுகளுக்கு முன் துவக்கியது. இதில், குறைந்த மூலதனம் கொண்ட, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புதிய பங்குகளை வெளியிட்டு, கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளன. சில ஆண்டுகளாக, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.
பெரிய நிறுவனங்களை விட, குறைந்த செலவில், ஏராளமான வேலைவாய்ப்புகளை அளிப்பதுடன், கிராமப்புறங்கள் தொழில்மயமாகவும், பொருளாதாரத்தில் மேம்பாடு காணவும் துணை புரிகிறது. சிறிய, நடுத்தர நிறுவனங்கள், வளர்ச்சிக்கும், விரிவாக்க திட்டங்களுக்கும் தேவையான நிதியை, சுலபமாக திரட்ட, எஸ்.எம்.இ., சந்தை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|