பதிவு செய்த நாள்
17 ஜூலை2017
00:20
உச்சத்தில் தொடர்ந்து வீற்றிருக்கும் சந்தை குறியீடுகள், சந்தைக்குள் வர காத்திருப்போர் மனதில் ஒருவித அவசர நிலையை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, வைப்பு கணக்குகளில் இருந்து பங்கு சந்தைக்கு இடம்பெயர விரும்புவோர் அலை அலையாக, பரஸ்பர நிதி திட்டங்களில் பணத்தை செலுத்துகின்றனர்.
பரஸ்பர நிதி திட்டங்களில் எந்த வகையான தேர்வுகளை செய்கிறோம் என்பது மிக முக்கியம். நாம் எடுக்கும் முடிவுகளும், திட்ட தேர்வுகளும் நமக்கு உகந்தவையா என்பதை உணர்ந்து செய்வது மிக அவசியம். தற்போது, வைப்பு கணக்கில் இருந்து பங்கு சந்தைக்கு இடம் பெயரும் முதலீட்டாளர்கள் பெருவாரியாக, பாலன்ஸ்ட் பண்ட் என்ற திட்டங்களில் முதலீடுகளை குவிக்கின்றனர். மாதா மாதம் ஒரு சதவிகிதம், டிவிடெண்ட் மூலம் கிடைக்கும் என்ற வாய்வழி உறுதிமொழியின் பேரில் பொதுமக்கள் தங்கள் பணத்தை இந்த வகை முதலீடுகளில் அவசரமாக செலுத்துகின்றனர்.
டிவிடெண்ட் என்பது எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்பதை முதலீட்டாளர்கள் புரிந்து கொள்வது அடிப்படை தேவை. பொதுவாக டிவிடெண்ட் என்பது லாபத்தில் இருந்து கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அந்த லாபம் உங்கள் முதலீட்டிலிருந்து இருக்க தேவை இல்லை. திட்டம் துவங்கிய நாள் முதல் கூடி இருக்கும் நிகர லாபத்தில் இருந்து டிவிடெண்ட் கொடுக்க நம் வரைமுறைகள் அனுமதிக்கின்றன. ஆகவே, நாம் முதலீடு செய்த பணத்தின் மதிப்பு குறைந்தாலும், நமக்கு தொடர்ந்து டிவிடெண்ட் கொடுக்க முடியும்.
ஆனால், இடைப்பட்ட காலத்தில் ஒருவேளை நாம் பணத்தை திரும்பப்பெற வேண்டிவந்தால் நமக்கு கிடைக்கும் தொகை முதலீட்டை விட குறைய வாய்ப்பு உண்டு. ஆகவே, குறுகிய கால முதலீடு செய்வோர் இதை நன்கு புரிந்து கொள்வது நல்லது. வட்டிக்காக வைப்பு கணக்கு வைப்போர், வட்டி குறையும் சூழலில் சற்று நுணுக்கமாக ஆய்வு செய்ய வேண்டும். மாற்று முதலீடுகளை தேர்வு செய்வதில் உள்ள நிறை குறைகளை நன்கு உணர்ந்து தேர்வு செய்ய வேண்டும்.வைப்பு கணக்கில் இருந்து பாலன்ஸ்ட் பண்ட் திட்டங்களுக்கு மாற்றும் முன் சில கேள்விகளுக்கு விடை கண்டுகொள்ள வேண்டும். நம் முதலீட்டின் கால அவகாசம் என்னவாக இருக்க வேண்டும்?
முதலில், அந்த முதலீட்டு பணத்தை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு நாம் திரும்ப பெறவேண்டிய அவசியம் இருக்கக் கூடாது. நீண்டகால முதலீடு மட்டுமே இந்த வகை திட்டங்களில் வெற்றி பெறும் என்பதை தெளிவாக புரிந்து கொள்வது அவசியம். குறுகியகால முதலீடுகளுக்கு இந்த திட்டங்கள் ஏற்றவை அல்ல என்பதை தெளிவாக உணர வேண்டும்.வைப்பு கணக்கின் பாதுகாப்பு இந்த முதலீடுகளில் உண்டா? நம்மை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?வைப்பு கணக்கில் இருக்கும் பாதுகாப்பு இவற்றில் நிச்சயம் இல்லை. மேலும், சந்தை வீழ்ச்சி கண்டால் இந்த வகை திட்டங்களும் மதிப்பிழக்கும். குறுகிய கால மதிப்பிழப்பிற்கு நாம் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். அந்நேரங்களில், அச்சம் நம்மை எந்த அவசர நடவடிக்கைகளிலும் தள்ளாமல் உறுதி காக்கும் மனம் வேண்டும். சந்தையின் ஏற்ற தாழ்வுகளை சமநிலைப்பாட்டோடு ஏற்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு போதும் அவசர முடிவுகளை எடுக்கும் நிலைக்கு நாம் போகக்கூடாது.
குறுகிய கால முதலீடுகளை எங்கு செய்தால் நல்லது?வங்கியில் அவசர தேவைக்கு வைத்திருக்கும் பணத்தை பங்கு திட்டங்களில் ஒருபோதும் முதலீடு செய்யக்கூடாது. அவற்றை குறுகிய கால வைப்பு கணக்குகளிலோ, அல்லது பரஸ்பர நிதிகளின் குறுகிய கால கடன் திட்டங்களிலோ முதலீடு செய்வது நல்லது. நம் பணத்தேவைகளை நன்கு புரிந்து அவை எந்த வகையிலும் சிக்கல்களுக்கு ஆளாகாமல் இருக்க முதலீட்டு தேர்வுகளை கவனமாக செய்யவேண்டியது மிக அவசியம்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|