பதிவு செய்த நாள்
31 ஜூலை2017
08:34
புதிதாக வாங்கிய காருடன், ‘போட்டோ’ எடுத்துக் கொண்டு, முகநுாலில் பதிவிடுபவரா நீங்கள்? வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு, அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களை, ‘இன்ஸ்டாகிராமில்’ பதிவேற்றுபவரா? புதிய நகைகள், வசதிகளை பற்றி, சமூக ஊடகங்களில் பெருமை பேசுபவரா? ஜாக்கிரதை, உங்களை, வருமான வரித்துறையின் வேவுக் கண் பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆம். மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் அடுத்த அதிரடி இது தான். பொதுவாக, இந்தியாவில் நேரடி வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மொத்தமுள்ள, 125 கோடி பேரில், 4 சதவீதம் பேர் மட்டும் வரி செலுத்துகின்றனர். அதாவது, 78 லட்சம் பேர் மட்டுமே, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவதாக காண்பித்து உள்ளனர். இதிலும், 61 லட்சம் பேர், மாத சம்பளக்காரர்கள். சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதன் மூலம், மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிப்பதோடு, வரி வருவாயையும் உயர்த்த முடியும் என்பது, மத்திய அரசின் எண்ணம்.
உஷாராகி விடும்இது எல்லாவற்றையும்விட, வரி ஏய்ப்போர் எண்ணிக்கை மிக அதிகம் என்று கருத்து நிலவுகிறது. இதற்கு ஒரு கணக்கு பின்பற்றப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு, செலுத்தப்பட்ட வரியை ஒப்பிடும் விகிதமே அந்த கணக்கு. மொத்த உள்நாட்டு உற்பத்தி, 122 லட்சம் கோடி ரூபாய்; ஆனால், திரட்டப்பட்ட வரி வருவாயோ, 16.97 லட்சம் கோடி ரூபாய்; அதாவது, 16.6 சதவீதம். பிற வளர்ந்த நாடுகளில், இந்த விகிதம் மிக அதிகமாக உள்ளது. சீனாவில், 19 சதவீதம், பிரேசிலில், 35 சதவீதம், ரஷ்யாவில், 19.5 சதவீதம், அமெரிக்காவிலோ, 35 சதவீதம். பொருளாதார கூட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பைச் (ஓ.இ.சி.டி.,) சேர்ந்த, 21 நாடுகளுடன் ஒப்பிடும் போதும், நம் விகிதம் குறைவானதே.
இந்த சூழ்நிலையில், நம் வரி வருவாயை உயர்த்த, மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் திட்டத்துக்கு பெயர், ‘புராஜெக்ட் இன்சைட்.’ 1,000 கோடி ரூபாய் செலவில், ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பின்னணி தகவல் சேகரிப்பு நடைமுறை இது. இதன்படி, மக்களின் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்படுகின்றன. உதாரணமாக, அவர்களுடைய கடன் அட்டை, பற்று அட்டை, இணைய வணிகம், மளிகை சாமான்கள் வாங்குவது, ஆடம்பரப் பொருட்கள் வாங்குவது, வெளிநாட்டு பயணம் என, அனைத்து தகவல்களும் திரட்டப்படுகின்றன.
இதன்பின், தனிநபர்களோ, நிறுவனங்களோ, தங்கள் வருமான வரியைச் செலுத்தும் போது, சந்தேகத்துக்கிடமான வகையில், அவர்கள் தங்கள் வரவுகளை குறைத்து காண்பித்தால், வரித்துறை உஷாராகிவிடும். உடனே, கிடுக்கிப்பிடி தான். வரி ஏய்ப்போருக்கு நிச்சயம், சிம்ம சொப்பனம் தான் என்பதில் சந்தேகமில்லை.இதே போன்ற திட்டம், இங்கிலாந்தில், ‘கனெக்ட்’ என்ற பெயரில் நடைமுறையில் இருக்க, மற்ற நாடுகளும் இதை பின்பற்றுகின்றன. எல்லாருக்கும் வரி வருவாய் உயர்ந்திருக்கிறது என்பது தான், இந்தியாவின் நப்பாசையைத் துாண்டிவிட்டிருக்கிறது.
ஒப்பிட வேண்டும்ஆனால், அடிப்படையான சில கேள்விகள் இங்கே தொக்கி நிற்கின்றன. ஜி.டி.பி.,க்கும், வரி வருவாய்க்கும் இடையிலான விகிதத்தை, எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? இதற்கு, இந்தியா மற்றும் ஓ.இ.சி.டி., நாடுகளின், 50 ஆண்டுகள் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஓ.இ.சி.டி., நாடுகள் என்பவை, பொருளாதாரத்தில் ஏற்கனவே வளர்ந்த நாடுகள். அவற்றின், ஜி.டி.பி., –வரி வருவாய் விகிதம் அதிகமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. அதை, நம் இந்தியாவுக்கான அளவுகோலாக வைப்பதில் தான் தவறு இருக்கிறது.இதற்கு பதில், நம்முடைய, ஜி.டி.பி., எவ்வளவு வேகமாக வளர்ந்துள்ளது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதே சரி. 1965 – 1990 வரையான, முதல், 25 ஆண்டுகளில், ஜி.டி.பி., – வரி வருவாய் விகிதம், 10 – 16 சதவீதம் வரை உயர்ந்த போது, நம், ஜி.டி.பி., 2.8 மடங்கு வளர்ந்தது. 1990 – 2014 வரையிலான கால கட்டத்தில், ஜி.டி.பி., – வரி வருவாய் விகிதம் சராசரியாக, 16 – 17 சதவீதமாக நிலைபெற்று விட்டது.
ஆனால், ஜி.டி.பி.,யோ இக்கால கட்டத்தில், 4.5 மடங்கு வளர்ந்துள்ளது. வரி வருவாய்க்கான சதவீதம் அதே அளவு இருந்தாலும், நிச்சயம் திரட்டப்பட்ட தொகை அதிகமாகத் தானே இருக்க வேண்டும்? வரி வருவாயில் நேர்முக வரி, மறைமுக வரி இரண்டும் உண்டு. இந்தியாவில் இவ்விரண்டு வரிகளின் விகிதம், தோராயமாக 35:65. இது, 50 ஆண்டுகளுக்கு முன், 13:87 என்ற விகிதத்தில் இருந்தது. அங்கிருந்து தான் படிப்படியாக, 35:65 ஆகியுள்ளது. ஓ.இ.சி.டி., நாடுகளில் (அதாவது வளர்ந்த பொருளாதார நாடுகளில்) இந்த விகிதம், 67:33. 67 சதவீதம் என்பது, நேர்முக வரி.
இந்தியாவும், இது போன்று நேர்முக வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என, முயற்சி எடுப்பதன் தொடர்ச்சியே, முகநுாலையும், இன்ஸ்டாகிராமையும் துழாவுவதில் வந்து முடிந்திருக்கிறது. வரி ஏய்ப்போரை கண்டுபிடிப்பதற்கு இது வழியல்ல. பெரு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் வரிச் சலுகைகளை கட்டுப்படுத்தி, மானியங்களை நெறிப்படுத்தி, செலவுகளை குறைத்து, சிக்கனத்தை அதிகப்படுத்தி, நிர்வாகத்தை மேம்படுத்துவதே, சரியான தீர்வாக அமையும்.
-ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|