பதிவு செய்த நாள்
25 ஆக2017
07:52
மும்பை: ‘‘திட்டங்களுக்கு கடன் வழங்குவதில், வங்கிகளின் கொள்கை மாற வேண்டும்,’’ என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதிகாரி, சந்தா கோச்சார் தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் பேசியதாவது: வங்கிகளின் கடன் வளர்ச்சி குறைந்துள்ளது. சில ஆண்டுகளாக, அனைத்து துறைகளிலும், திட்டப் பணிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள், வங்கிகளுக்கு பெரும் சுமையாக உருவெடுத்து உள்ளன. அத்துடன், திட்டங்களுக்கான கடன் வளர்ச்சியும் குறைந்துள்ளது. இதற்கு, திட்டங்களுக்கான நிலம் கிடைப்பதில் பிரச்னை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என, பல காரணங்கள் உள்ளன.
வங்கிகள், திட்டங்களுக்கு கடன் வழங்கும் கொள்கையில், அடிப்படை அம்சங்கள் சிலவற்றை மாற்றினால்,அவற்றின் கடன் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். ஒரு திட்டத்திற்கு கடன் உதவி அளிப்பதற்கு முன், அத்திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் அனைத்தும் முடிந்து விட்டனவா என்பதை, வங்கிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஊகத்தின் அடிப்படையில், திட்டங்களுக்கு கடன் வழங்கும் கொள்கை மாற வேண்டும். நிறுவனர்கள் கூட, ஒரு திட்டம் தொடர்பான, அனைத்து ஒப்பந்தங்களும் கையெழுத்தாவதற்கு முன், முதலீடு குறித்து உறுதி அளிக்க முன்வருவதில்லை. அது போல, வங்கிகளும், ஒரு திட்டத்திற்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கும் முன், அத்திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் அனைத்தும் முடிந்து விட்டனவா என்பதை ஆராய வேண்டும். இது, திட்டங்கள் சார்ந்த கடன் வளர்ச்சிக்கு துணை புரியும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த நிதியாண்டில், வங்கிகளின் கடன் வளர்ச்சி, 5.08 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், வங்கிகளின் கடன் வளர்ச்சி, 6 சதவீதத்திற்கும் கீழாக சரிவடைந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|