பதிவு செய்த நாள்
26 ஆக2017
08:35
புதுடில்லி : வியட்நாம் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் இருந்து, விதிகளை மீறி, அளவிற்கு அதிகமாக நைலான் நுாலிழை இறக்குமதி ஆகியுள்ளது குறித்த விசாரணையை, பொருள் குவிப்பு தடுப்பு மற்றும் துணை வரிகள் இயக்குனரகமான, டி.ஜி.ஏ.டி., துவக்கியுள்ளது.
திரைச் சீலைகள், மேசை விரிப்புகள், தொழிற்சாலைகளுக்கான திரைகள், மீன் வலைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்க, நைலான் எப்.டி.ஐ., எனப்படும், நைலான் நுாலிழை பயன்படுகிறது. மேலும், ‘எம்பிராய்டரி’ பணிகளுக்கும், பலதரப்பட்ட தையல் வேலைகளுக்கும், நைலான் நுாலிழை இன்றியமையாததாக உள்ளது. இவ்வகை நைலான் நுாலிழைகளை, வியட்நாம் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் அதிக அளவில், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
இவை, குறைந்த விலையில், அளவிற்கு அதிகமாக இறக்குமதியானதால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றில், குஜராத் ஸ்டேட் பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ், ஜே.சி.டி., குஜராத் பாலிபிலிம்ஸ், ஏ.ஒய்.எம்., சின்டெக்ஸ் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள், ‘நைலான் நுாலிழை இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க வேண்டும்’ என, டி.ஜி.ஏ.டி.,யிடம் முறையிட்டன.
இதையடுத்து, வியட்நாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நைலான் நுாலிழை இறக்குமதி குறித்து, டி.ஜி.ஏ.டி., வெளியிட்டுள்ள அறிக்கை: வியட்நாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து, அளவிற்கு அதிகமாக குவிக்கப்பட்ட நைலான் நுாலிழையால், உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட புகார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 2015 அக்டோபர் – 2017 மார்ச் வரை நடைபெற்ற, நைலான் நுாலிழை இறக்குமதி குறித்த விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
இத்துடன், 2012 – 16 வரையில் இறக்குமதியான நைலான் நுாலிழையால், உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விசாரணைக்கு பின், குற்றச்சாட்டு உறுதியானால், வியட்நாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நைலான் நுாலிழை இறக்குமதிக்கு, விதிக்கப்பட வேண்டிய பொருள் குவிப்பு தடுப்பு வரி முடிவு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் புகாருக்கு இந்தியா மறுப்பு:
பீஜிங்கில் உள்ள, இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐந்து ஆண்டுகளாக, சீனாவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும், ரசாயனம், உருக்கு, உலோகம் உள்ளிட்ட, 93 வகையான பொருட்களுக்கு, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும், 93 பொருட்களுக்கு இவ்வரி விதிக்கப்பட உள்ளதாக, சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் உண்மையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|