பதிவு செய்த நாள்
28 ஆக2017
07:26
வட்டி விகிதம் குறையும் சூழலில், சேமிப்பு வங்கி கணக்கை திறம்பட நிர்வகிப்பது மற்றும் அதிக பலன் தரக்கூடிய நிதி சாதனங்களை பரிசீலிப்பது ஆகியவை அவசியமாகிறது.
கடனுக்கான வட்டி விகிதம் மட்டும் அல்லாமல், வைப்பு நிதி மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைந்து வரும் சூழலில் தற்போது, வங்கிகள் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தையும் குறைக்கத் துவங்கியுள்ளன. பொதுவாகவே வங்கி சேமிப்பு கணக்கில் வைக்கப்படும் பணத்திற்கு குறைவான வட்டி விகிதமே வழங்கப்படுகிறது. பொதுவாக இது, 4 சதவீதமாக அமைகிறது. ஒரு சில வங்கிகள் கூடுதல் வட்டி விகிதம் அளிக்கின்றன. புதிய வகை வங்கி களான, பேமெட்ன் வங்கிகளில் சில அதிக வட்டி அளிக்கின்றன.
பணவீக்கம் காரணம்:
இந்த பின்னணியில் அண்மைகாலமாக வங்கிகள் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை மேலும் குறைக்கத் துவங்கியுள்ளன. நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் வங்கி தான் முதலில் இதை துவக்கி வைத்தது. அதன் பின், மற்ற வங்கிகளும் தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன. இதுவரை, 11க்கும் மேற்பட்ட வங்கிகள் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. இந்த போக்கு தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகள் சேமிப்பு கணக்கிற்கான வட்டிவிகிதத்தை குறைக்க பல காரணங்கள் இருக்கின்றன. பணவீக்கம் இவற்றில் பிரதானமாக இருக்கிறது. தற்போதைய சூழலில், பணவீக்கம் குறைந்து வருவதால், உண்மையான வட்டி விகிதம் என்பது அதிகமாக இருப்பதாக வங்கியாளர்கள் கருதுகின்றனர். ஜூன் மாதத்தில் சில்லரை பணவீக்க விகிதம், 1.54 சதவீதம் குறைந்து ஓராண்டு அரசு பத்திரங்கள் மீதான பணவீக்கம் சார்ந்த பலன், 4.82 சதவீதமாக இருந்தது. வழக்கமான வட்டி விகிதத்துடன் பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்ட பின், உண்மையான வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது. வழக்கமான வட்டி விகிதத்தில் இருந்து பணவீக்கத்தை கழிப்பதன் மூலம் உண்மையான வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கத் துவங்கியுள்ளன. இந்த கணக்கு வங்கிகளுக்கு மட்டும் அல்ல வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்கு, ‘டிபாசிட்’ செய்துள்ளவர்களுக்கும் பொருந்தும். பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் வட்டியின் பலன் இன்னும் குறைவாக இருக்கும்.
பணத்தின் மதிப்பு:
வங்கிகள் சேமிப்பு கணக்கு மீது, தினசரி அடிப்படையில் வட்டியை கணக்கிட்டு காலாண்டு அடிப்படையில் வழங்குகின்றன. இந்த நிலையில் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கான பலன் மீதான மதிப்பின் மீது முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாவதாக நிதி வல்லுனர்கள் கருதுகின்றனர். பொதுவாகவே, உடனடியாக தேவைப்படாமல் இருக்கும் பணத்தை சேமிப்பு கணக்கில் வைத்திருப்பது சரியானது அல்ல என, நிதி வல்லுனர்கள் கூறி வருகின்றனர். ஆனால், வட்டி விகிதம் குறையத் துவங்கியுள்ள நிலையில், இது நிச்சயம் ஏற்றதல்ல என்கின்றனர்.
சேமிப்பு கணக்கில் குறைவாகவே பலன் கிடைப்பதால், பண வீக்கம் மற்றும் வரி தாக்கத்தை கணக்கில் கொண்டு பார்த்தால் நீண்ட கால நோக்கில் அதிக பலனை பெற வாய்ப்பில்லை என கருதப்படுகிறது. எனவே, சும்மா இருக்கும் பணத்தை, மேலும் சிறந்த வழியில் முதலீடு செய்வதே சரியாக இருக்கும் என, வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இதற்கான அவசியம் மேலும் வலுப்பெற்று உள்ளது.
நிதி சாதனங்கள்:
சேமிப்பு கணக்கிற்கு தேவையான குறைந்த பட்ச தொகை மற்றும் அவசர செலவுக்காக தேவைப்படக்கூடிய தொகை போக, எஞ்சியுள்ள கூடுதல் தொகையை பொருத்தமான நிதி சாதனங்களில் முதலீடு செய்ய வேண்டும். சேமிப்பு கணக்கில் இருந்து வைப்பு நிதிக்கு மாற்றக்கூடிய வசதியை பயன்படுத்தலாம். ஆனால், தற்போது வைப்பு நிதிக்கான வட்டியும் குறைவாக உள்ள சூழலில், ‘லிக்விட் பண்ட்’ வகை மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதை பரிசீலிக்கலாம் என்கின்றனர். உடனடியாக பணம் எடுக்கும் வாய்ப்பு கொண்ட லிக்விட் பண்ட்கள், 6 சதவீத அளவிலான பலனை அளித்து வருகின்றன. பொதுவாகவே சேமிப்பு கணக்கில் அதிக தொகையை சிறு முதலீட்டாளர்கள் முடக்கி வைப்பதை நிதி வல்லுனர்கள் ஆதரிப்பதில்லை. ஆனால், இந்தியர்கள் மத்தியில் இந்த வழக்கமே பரவலாக உள்ளது. இந்த நிலையில் இருந்து மாறி, மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட நிதி சாதனங்களில் முதலீடு செய்வது பற்றி பரிசீலிக்க இது பொருத்தமான காலமாக அமைகிறது.
மாற்று வழிகள்* பொதுவாகவே, சேமிப்பு கணக்கில் அதிக தொகையை முடக்கி வைப்பது பொருத்தமானது அல்ல.* சும்மா இருக்கும் பணத்தை (ஐடில் கேஷ்) சரியான நிதி சாதனங்களுக்கு மாற்ற வேண்டும்.* மியூச்சுவல் பண்ட் வாய்ப்புகளை பரிசீலிக்க வேண்டும்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|