பதிவு செய்த நாள்
02 அக்2017
01:09
முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, சுப்பிரமணியன் சாமி, ஆடிட்டர் குருமூர்த்தி என பலரும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகின்றனர். ஜூன் மாதத்தோடு முடிந்த, முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி,5.7 சதவீதத்துக்கு சரிந்ததே கடுமையான விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
தனிநபர்களைக் குறை சொல்வதோ, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் உள்ள குறைகளை முன்னிலைப்படுத்துவதோ எந்தப் பலனையும் தரப் போவதில்லை. மாறாக, ஆக்கப்பூர்வ அணுகுமுறை என்ன; வழிமுறை என்ன? என்று யோசிப்பதே தேச நலனுக்கு உகந்தது.பணமதிப்பு நீக்கமும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதும், ஜி.டி.பி., சரிவுக்கு முக்கியமான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. அதற்கு முன்பிருந்தே நம் கவனத்தை அதிகம் கவராத வேறொரு பிரச்னை இருக்கிறது.
இந்திய விவசாய வளர்ச்சி, 2004 – 12 காலகட்டத்தில் வேகமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் விவசாய உற்பத்தி, 3 சதவீதம் உயர, விவசாய வருவாய், 7.5 சதவீதமாக பெருகியது. இதனால் ஏற்பட்ட செல்வப் பெருக்கத்தால், பொருளாதார வளர்ச்சி நகரங்களுக்கும் பெருகி, முன்னேற்றம் ஏற்பட்டது.இந்த நிலைமை, 2013 –14ல் மாற்றமடைந்தது. இந்திய ரிசர்வ் வங்கி, நிதிப் பற்றாக்குறையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முயன்ற போது, உலக அளவில் விவசாய பொருட்களுக்கான விலைகள் சரிந்து வந்தன.
ஒவ்வொரு ஆண்டும், 8 சதவீத அளவுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட குறிப்பிட்ட சில விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, 3.5 சதவீதமாக சரிந்தது. இதனால், ஊரகப் பகுதிகளில் ஏற்பட்டு வந்த இயல்பான வளர்ச்சி, தளர்ச்சியடையத் துவங்கியது.இதனோடு, 2014 – 15, 2015 – 16 இரண்டு ஆண்டுகளில் நாட்டில் கடும் வறட்சி ஏற்பட, விவசாயம் முற்றிலும் பொய்த்தது. இதன் விளைவாக பல்வேறு மட்டங்களில் பாதிப்பு ஏற்பட, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சரிவு. பணமதிப்பு நீக்கம், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது.
இந்திய, ஜி.டி.பி.,யில், 40 சதவீத பங்களிப்பு செய்வது முறைசாரா தொழில்கள். அவை பெரும்பாலும் ரொக்கப் பரிமாற்றத்தையே அடிப்படையாக கொண்டவை. இவற்றில் பெரும்பாலும் ஊரக, சிறுநகரப் பகுதிகளிலேயே இயங்குவது கண்கூடு. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஏற்கனவே விவசாயத்தால் நொடிந்து போனவர்களை மேலும் சிரமப்படுத்தியது. இவையெல்லாமும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவுக்கு முக்கிய காரணங்கள் ஆகின்றன.
என்ன செய்யலாம்?இரண்டு, மூன்று முனைகளிலிருந்து வளர்ச்சி வேகத்தை துரிதப்படுத்த வேண்டும். முதலில் வட்டி விகிதங்கள். ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் மற்றும் நிதி ஆலோசனைக் குழுவின் முக்கிய குறிக்கோளாக இருப்பது நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது தான். மொத்த ஜி.டி.பி.,யோடு ஒப்பிடும்போதும் நிதிப் பற்றாக்குறையை, 3.2 சதவீத அளவில் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பது அவர்களது எண்ணம்.நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், தொழில் வளர்ச்சியை காவு கொடுக்கப்படக் கூடாது.
அக்டோபரில் வரக்கூடிய ரிசர்வ் வங்கியின் நிதிக் குழுக் கூட்டத்தில் மேலும், 1 சதவீத அளவுக்கு, ‘ரெப்போ’ வீதம் குறைக்கப்பட வேண்டும் என்பது நிபுணர்கள் கருத்து. கால் சதவீதம், அரை சதவீதம் அல்ல, முழுமையாக, 1 சதவீதம் வேண்டும். இதனால், வங்கிகளிலிருந்து கிடைக்கும் கடன் தொகைக்கான வட்டியும், இதர வட்டி விகிதங்களும் பெருமளவு குறையக் கூடும்.இதனால், இன்று சோர்ந்து போயிருக்கக்கூடிய தொழில் துறையினருக்கு, பெரிய டானிக் கிடைக்கும். ஏற்கனவே, வாராக் கடன் பிரச்னையில் தத்தளிக்கும் வங்கித் துறையும், தமது பயங்களையும், தயக்கங்களையும், தாமதங்களையும்கைகழுவி, தொழில் கடன் வழங்குவதில் முனைப்பு காட்ட வேண்டும்.
நிதிப் பற்றாக்குறை இந்த ஆண்டு, 3.5 சதவீதமும், அடுத்த ஆண்டு, 4 சதவீத அளவுக்கு உயர்ந்தாலும் பரவாயில்லை. உற்பத்திப் பெருக்கமும், வேலைவாய்ப்புகளும், செல்வ வளமும் பெருகிய பின், அதை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து. தனியார் நிறுவனங்களுக்கு, இந்தியாவில் தொழில் செய்வது லாபகரமானது என்பதை மீண்டும் நிறுவ வேண்டும். அதனால், நிறுவன வரியை, 10 சதவீதமாக குறைக்க வேண்டும்.
இவை மட்டுமே போதுமா? இதன் மூலம், நிறுவனங்களிடம் இருந்து அரசுக்கு வரும் வரி வருவாயும் பெருகும், அதேசமயம், அவர்களுடைய முதலீடுகளுக்கு கிடைக்கும் லாபத்தின் அளவும் உயரும்.மூலதன ஆதாய வரி முற்றிலும் நீக்கப்பட வேண்டும். இதனால், மூலதனப் புழக்கம் அதிகரிக்கும். ஜி.எஸ்.டி., வரி விகிதத்தில் உள்ள பல்வேறு அடுக்குகளை நீக்கி, ஒரே அடுக்கில் கொண்டு வர வேண்டும். இதன் மூலம், தேவையற்ற கணக்கீட்டுக் குழப்பங்கள் தீர்க்கப்படும்.
நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் தாக்கத்தை தடுக்க, ரயில்வே, வங்கிகள் உள்ளிட்ட துறைகளில் ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது. இதன் மூலமும் பொருளாதார வளர்ச்சி வேகம் பெறும்.சில சமயங்களில் நான்கு மாட வீதிகளில் தேர் போகும்போது, எங்கேனும் முட்டிக்கொண்டு நின்றுவிடலாம். திட்டமிட்டு, நவீன கருவிகளைப் பயன்படுத்தி, ஊர் கூடி, மீண்டும் ரதத்தை ஓட வைப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்தியப் பொருளாதாரத் தேரின் நிலையும் இப்போது அப்படித்தான் இருக்கிறது. ஊர் கூடி தேர் இழுப்போம்.
-ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|