பதிவு செய்த நாள்
02 அக்2017
01:18
‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனையை நாடுபவர்கள், அதை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான அடிப்படை அம்சங்களை அறிந்திருப்பது அவசியமாகிறது.
ரொக்க பயன்பாட்டை குறைப்பதற்கான அரசின் முயற்சிகள் காரணமாக, ஆன் – லைன் மூலம் பணம் செலுத்தும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைக்கு பலரும் மாறி வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனை, பல்வேறு சாதகமான அம்சங்களை கொண்டிருந்தாலும், சைபர் தாக்குதலுக்கான வாய்ப்பு இருப்பது குறித்து, பயனாளிகள் விழிப்புணர்வு கொள்வது அவசியமாகிறது.
தேடலில் கவனம்:
டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்திப்பதற்கு ஏற்ப, சைபர் கிரிமினல்களின் கைவரிசையும் அதிகரித்திருப்பதாக, சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். மால்வேர் வகை வைரஸ்கள் மூலம் ஆன் – லைனில் பணத்தை திருடுவது அதிகரித்திருப்பதாகவும் எச்சரிக்கின்றனர். பயனுள்ள செயலிகள் போர்வையில், கவரும் மோசடி செயலிகள் பின்னே மறைந்திருக்கும் மால்வேர், பயனாளிகள் அறியாமலேயே அவர்கள் பணத்தை களவாடுவதும் நிகழ்கிறது. எனவே, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பாதுகாப்பாக மேற்கொள்ள பயனாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
இணையத்தில் பொருட்கள் தொடர்பான தகவல்களை தேடும் போது அல்லது விலை ஒப்பீடு வசதியை பயன்படுத்தும் போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனக்குறைவாக மால்வேர் பக்கங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடிய மோசடி இணைப்புகளில் ‘கிளிக்’ செய்வதை தவிர்க்க வேண்டும். சைபர் கிரிமினல்கள், இத்தகைய இணைப்புகளை உருவாக்கி, வலை விரித்து காத்திருக்கின்றனர் என்பதை அறிய வேண்டும். இணைப்புகளை கிளிக் செய்வதற்கு முன், அவை நம்பகமானதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். வைரஸ் தடுப்பு மென்பொருள் சேவைகளையும் பயன்படுத்தலாம். அதே போல, இ – காமர்ஸ் தளங்களுக்கான இணைப்புகளை கிளிக் செய்யாமல், அவற்றின் இணைய முகவரியை பிரவுசரில் நேரடியாக, ‘டைப்’ செய்து அணுகலாம்.
தனி கம்ப்யூட்டர்:
ஒரே கம்ப்யூட்டரை எல்லாவிதமான பயன்பாட்டிற்கும் அணுகுவதை தவிர்க்கலாம். வாய்ப்பிருந்தால் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு என, தனி கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம். கூகுள் குரோமை நிறுவி, எச்.டி.டி.பி.எஸ்., பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம். தகுந்த வைரஸ் தடுப்பு மென்பொருள் அவசியம். இதே போல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு என, தனி இ–மெயில் முகவரியையும் உருவாக்கி பயன்படுத்துவது நல்லது. பாதுகாப்பிற்காக தற்காலிக கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம்.
பல நிறுவனங்கள் இத்தகைய தற்காலிக கிரெடிட்கார்டுகளை வினியோகம் செய்கின்றன. இவற்றை இணையத்தில் ஒருமுறை பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம். இந்த கார்டு தொடர்பான தகவல்கள் களவாடப்பட்டாலும் அபாயம் இல்லை. எனினும் இவற்றை குறிப்பிட்ட சூழலில் தான் பயன்படுத்த முடியும். மற்ற நேரங்களில் கிரெட்டி கார்டு வரம்பை குறைத்து பயன்படுத்தலாம்.
பாஸ்வேர்டு பாதுகாப்பு:
பல்வேறு கணக்குகள் வைத்திருப்பவர்கள், அவற்றை முறையாக நிர்வகிக்க, பாஸ்வேர்டு மேனேஜர் சேவையை பயன்படுத்தலாம். பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான வழக்கமான தவறுகளை தவிர்க்க இந்த சேவை உதவும். உதாரணமாக எல்லா சேவைகளுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டாம். மேலும், பொது இடங்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் மற்றும் பொது வை – பை வசதிகளில் இருந்து நிதி பரிவர்த்தனைகளை இயக்க வேண்டாம். இவற்றில் எல்லாம் கைவரிசை காட்ட, ‘ஹேக்கர்கள்’ எப்போதும் காத்திருக்கின்றனர்.
எந்த இணைய தளத்திலும் அல்லது பரிவர்த்தனை தளங்களிலும், உங்கள் வங்கி கணக்கு எண் போன்ற தனிப்பட்ட விபரங்களை சேமிக்க வேண்டாம். விபரங்களை ஒவ்வொரு முறையும் தனியே, ‘டைப்’ செய்யவும். தெரியாத செயலிகளை பயன்படுத்தக்கூடாது. அதிகாரபூர்வமான செயலிகளை மட்டுமே நாட வேண்டும். அதிகாரபூர்வ இணையதளங்களில் இருந்து செயலிகளை தரவிறக்கம் செய்ய வேண்டும்.
பாதுகாப்பே முக்கியம்:
* டிஜிட்டல் பரிவர்த்தனையில் கவனம் தேவை
* தனிப்பட்ட விபரங்களை வெளியிடக்கூடாது
* பொது வை – பையில் பரிவர்த்தனை செய்யக்கூடாது
* நிதி பரிவர்த்தனைகளுக்கு என, தனி இ – மெயில் பயன்படுத்தலாம்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|