பதிவு செய்த நாள்
27 அக்2017
23:39
புதுடில்லி : மத்திய பிரதேசத்தில் உள்ள, வைரச் சுரங்க உரிமையை பெற, அதானி மற்றும் வேதாந்தா குழுமங்கள் இடையே, கடும் போட்டி நிலவுகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ரியோ டின்டோ நிறுவனம், 2004ல், ம.பி.,யில் உள்ள, பந்தர் பகுதியில், 3.20 கோடி காரட் அளவிற்கு, வைர வளம் உள்ளதை கண்டுபிடித்தது. இதையடுத்து, மாநில அரசின் அனுமதியுடன், வைரச் சுரங்கத்திற்கான, அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டது. இத்திட்டத்தில், 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய, ரியோ டின்டோ இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த வைரச் சுரங்கத்திற்கு, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைப்பது தாமதமானது.
இதனாலும், நிதி நெருக்கடியாலும், 14 ஆண்டுகளாக, 585 கோடி ரூபாய் செலவில் மேற்கொண்டு வந்த, வைர ஆய்வுப் பணிகளில் இருந்து வெளியேறுவதாக, ரியோ டின்டோ அறிவித்தது. இதையடுத்து, ம.பி., அரசு, பந்தர் வைரச் சுரங்கத்தை ஏலம் விட, முடிவு செய்துள்ளது. இந்த வைரச் சுரங்க உரிமையை பெற, அனில் அகர்வால் தலைமையிலான, வேதாந்தா குழுமம் மற்றும் கவுதம் அதானியின், அதானி குழுமம் களமிறங்கி உள்ளன. இரு குழுமங்களும், வல்லுனர் குழுக்களை, பந்தர் பகுதிக்கு அனுப்பி கள ஆய்வு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்பந்த புள்ளி:
நவ., முதல் வாரத்தில், பந்தர் வைரச் சுரங்க உரிமத்திற்கான, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும். இந்த வைரச் சுரங்கம் செயல்பட துவங்கினால், உலகளவில், வைரம் உற்பத்தியாகும், 10 பிராந்தியங்களில் ஒன்றாக, ம.பி., இடம் பெறும். இதனிடையே, பந்தர் வைரச் சுரங்க ஏலத்திற்கு தடை கோரி, நீதிமன்றத்தை நாட உள்ளதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|