பதிவு செய்த நாள்
12 நவ2017
23:45
‘பெர்சனல் லோன்’ எனப்படும், தனிநபர் கடன், மற்ற கடன்களை விட எளிதானதாக கருதப்படுகிறது. தனிநபர் கடன் பெறுவதற்கான விண்ணப்ப முறை மற்றும் ஆவணங்கள் சமர்ப்பித்தல் எளிதானது.
அவசரமான நிதித் தேவைகளை நிறைவேற்ற, தனிநபர் கடன் கைகொடுக்கிறது. ஈட்டுறுதி இல்லாத கடன் என்பதால், இதற்கான வட்டி விகிதமும் அதிகமாக இருக்கிறது. எந்த வகையான நிதி தேவைக்கும், தனிநபர் கடன் பெறலாம் என்றாலும், அதற்கு முன், சில முக்கிய அம்சங்களை மனதில் கொள்வது நல்லது. இந்த அம்சங்களை பரிசீலித்த பின்னர், தனிநபர் கடன் பெறுவது குறித்து தீர்மானிக்க வேண்டும்.
தனிநபர் கடன் பெற முடிவு செய்வதற்கு முன், அதற்கான தவிர்க்க இயலாத தேவை இருக்கிறதா? என, யோசிக்க வேண்டும். வேறு வழிகளில் பணத்தை புரட்ட வழி இருக்கிறதா? என, பார்க்க வேண்டும். கடன் பெற்ற பின், மாதத் தவணை செலுத்த வேண்டும் என்பதால், அதை சமாளிக்க முடியுமா என்றும், யோசிக்க வேண்டும். தவணை செலுத்துவதற்கான வழியை தயார் செய்து வைப்பதும், இந்த தொகை பட்ஜெட்டை பாதிக்காமல் இருப்பதையும், உறுதி செய்வது நல்லது.
கடன் பெறுவது என, தீர்மானித்த பின், அதற்கான கடன் தவணை காலத்தை பரிசீலிக்க வேண்டும். குறைந்த தவணையெனில், திரும்பி செலுத்தும் காலம் அதிகமாக இருக்கும். அதற்கேற்ப, மொத்த வட்டியும் அதிகமாக இருக்கும். பொதுவாக, அதிக மாத தவணை செலுத்தி, விரைவாக கடனை செலுத்தி முடிப்பதே ஏற்றதாக இருக்கும். கடனுக்கான மொத்த செலவை கணக்கிடும் போது, திரும்பி செலுத்தும் தொகையோடு, செயல்முறை கட்டணம் போன்றவற்றையும், கணக்கில் கொள்ள வேண்டும்.
கடன் பெறும் ஆர்வத்தில், வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்து, கேட்ட இடங்களில் கையெழுத்து போடுவது சுலபமாக இருக்கலாம். ஆனால், அதற்கு முன், சிறிய எழுத்துக்களில் உள்ள நிபந்தனைகள் மற்றும் விதிகளை பொறுமையாக படித்து பார்க்க வேண்டும். சலுகைகள் மற்றும் சுலபத் தன்மையால், கண்ணை மூடி செயல்படாமல், கடன் தொடர்பான அனைத்து அம்சங்களையும் அறிந்து செயல்பட வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|