பதிவு செய்த நாள்
12 நவ2017
23:57
தேசிய பங்குச் சந்தை குறியீடு, ‘நிப்டி’ கடந்த வாரம், வரலாற்று உச்சத்தை அதாவது, 10,490 புள்ளிகளை எட்டியது. இருப்பினும், இந்த உயர்வு நிலைக்கவில்லை. கடந்த வாரத்தில், நான்கு நாட்கள் சந்தை சரிவை சந்தித்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே, இதற்கு காரணமாகும்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை; ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆகியவை காரணமாக, இந்திய பொருளாதாரம் வளர்ச்சியின்றி காணப்படுகிறது. பணவீக்க விகிதம் உயர்ந்து வருகிறது; தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி குறைந்து வருகிறது. உள்நாட்டு மொத்த உற்பத்தி, இரு ஆண்டு வளர்ச்சி குறைவு நிலையில் உள்ளது. இச்சூழலில், கடந்த வாரம் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் சந்திப்பில், 178 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், சிறு வணிகர்களுக்கான காம்போசிஷன் வரி, மொத்த வியாபார அளவான, ஒரு கோடி ரூபாயில் இருந்து, ஒன்றரை கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது, இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும், நுகர்வு பொருட்கள், எலக்ட்ரிக்கல் பிட்டிங்ஸ், செராமிக் டைல்ஸ் போன்ற துறைகளைச் சார்ந்த பங்குகளுக்கும், இந்த வரி குறைப்பு சாதகமாக அமையும்.
சிமென்ட் மற்றும் பெயின்ட் மீதான வரியில், மாற்றம் இல்லாமல் போனது, அத்துறையினருக்கு ஏமாற்றமாகும். இரு வாரங்களாக, சந்தையின் ஏற்ற, இறக்கங்கள், ஜி.எஸ்.டி., மாற்றத்தின் மீதான எதிர்பார்ப்பில் அமைந்திருந்தது. செப்டம்பரின், தொழில் துறை வளர்ச்சி குறியீடான, ஐ.ஐ.பி., வளர்ச்சி விகிதம், 4.5 சதவீதத்தில் இருந்து, 3.8 சதவீதமாக குறைந்து போனது. மேலும், நடப்பு நிதியாண்டின், ஏப்., – செப்., வரையிலான காலத்தில், ஐ.ஐ.பி., வளர்ச்சி விகிதம், 2.5 ஆகும். இதுவே, முந்தைய நிதியாண்டில், 5.8 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்து, பணவீக்க விகிதம், மொத்த பொருட்கள் மீதான பணவீக்க விகிதம் ஆகியவை வர உள்ளன. பணவீக்க விகிதமான, சி.பி.ஐ., 3.2 சதவீதத்தில் இருந்து, 3.4 சதவீதமாக உயரும் எனவும், மொத்த விலை பணவீக்க விகிதமான, டபிள்யு.பி.ஐ., 3 சதவீதம் அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வாரம், அக்டோபரின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விபரமும் வர இருக்கிறது. இன்னும், சில முன்னணி நிறுவனங்களின், இரண்டாம் காலாண்டு முடிவுகளும் வர இருக்கின்றன. இவை யாவும், சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
நிப்டியின் அளவை பொறுத்தவரை, 10,245 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகும் சூழலில், மீண்டும் உயர வாய்ப்புள்ளது. அடுத்த இலக்கு, 10,460 மற்றும் 10,565 ஆகும். சப்போர்ட், 10,125. கடந்த வாரம், ஐரோப்பா மற்றும் ஜப்பான் சந்தைகள், குறுகிய காலத்திற்கு பின் சரிவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
கவனிக்க வேண்டிய பங்குகள்:
பேங்க் ஆப் பரோடான் பன்சாரி, இன்ஜினியரிங், ஷாலிமர் பெயின்ட்ஸ், லுபின், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|