பதிவு செய்த நாள்
27 நவ2017
00:59
அமெரிக்க பங்குச் சந்தையின் முக்கிய அங்கமாக இயங்கும் முதலீட்டு கருவி, இ.டி.எப்., என்று அழைக்கப்படும், ‘எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு’. வான்கார்டு என்ற நிறுவனம், இந்த வகை முதலீட்டு முறையை பிரபலப்படுத்தியது. முதலீட்டாளர்களுக்கு, குறைந்த நிர்வாக செலவில், தங்கள் சேமிப்பை செலுத்தி, அதில் நெடுங்கால வெற்றி ஏற்படுத்தும் எளிய கருவியே இ.டி.எப்.
இதன் முதலீடுகள் குறிப்பிட்ட சந்தை குறியீடுகள் சார்ந்து மட்டுமே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. தெளிவான, வெளிப்படையான பங்கு தேர்வுகள், நிலையான முதலீட்டுக் கொள்கைகள், மற்றும் சிறந்த நிறுவனங்கள் கொண்டு மட்டுமே அமையும் குறியீடு தேர்வுமுறைகள், அமெரிக்க சந்தையின் அபரிமித வளர்ச்சிக்கு வித்திடச் செய்தது.கடந்த, 40 ஆண்டு காலத்தில், அமெரிக்க சந்தையில் முதலீட்டு புரட்சி ஏற்பட வான்கார்டு நிறுவனமும், இ.டி.எப்., முதலீடும் முக்கிய காரணம். சாமானியரும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெற இந்த முறையானது வழிவகுத்தது. வான்கார்டின் அபரிமித வளர்ச்சியும் இ.டி.எப்., என்பதால் மட்டுமே அமைந்தது என்றால், அது மிகையாகாது.
பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதைவிட, இ.டி.எப்., முறையை அமெரிக்க ஆலோசகர்களும், முதலீட்டாளர்களும் அதிகம் விரும்புகின்றனர். ஆனால், இந்தியாவில், பரஸ்பர நிதிகளே இப்போதும் செழிக்கின்றன. இந்த சூழலில்தான், ’பாரத் 22’ என்ற இ.டி.எப்., அபார வரவேற்போடு நம் சந்தையில் நுழைந்துள்ளது. மூன்று தனியார் நிறுவனங்களும், இதர, 19 பொதுத்துறை நிறுவனங்களும் கொண்டு கச்சிதமாக அமைக்கப்பட்ட ஒரு தொகுப்புதான் ’பாரத்22 இ.டி.எப்.’ இந்த திட்டத்தில் பங்கு தேர்வுகள் மாறாது. நிர்வாகச் செலவுகள் மிகக் குறைவு. இது இ.டி.எப். மட்டுமே கொண்ட சிறப்பு அம்சம். பரஸ்பர நிதிகளில் இந்த அம்சங்கள் அதிகம் தென்படுவதில்லை. ஆனால், இதில் முதலீடு செய்ய, டிமேட் கணக்கு அவசியம் என்பதே இதன் குறை என்று கூறலாம். இந்த திட்டத்தின் அபார வெற்றி, வரும் காலங்களில் நடக்கும் அரசின் பங்குவிலக்கல் திட்டங்களுக்கு எளிதில் வழிவகுக்கும் என்றே தோன்றுகிறது.
அரசின் நவரத்னா நிறுவன பங்குகள் விற்பனையில், எதிர்கொள்ளும் அரசியல் ரீதியான சிக்கல்களுக்கும் விடை கிடைக்கும். யூ.டி.ஐ., சிறப்பு நிறுவனம் மூலம், அரசு ஏற்ற ஐ.டி.சி., எல்&டி மற்றும் ஆக்சிஸ் வங்கி பங்குகளை யாருக்கு விற்பது என்பதில் உள்ள நடைமுறை சிக்கலும் இந்த கருவி மூலம் கடக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், பங்குச் சந்தையில் சாமானியரும் பங்குபெற இ.டி.எப்., வழிவகுக்கும் என, நாம் எதிர்பார்க்கலாம். வெளிப்படைத்தன்மை அம்சத்தில், பரஸ்பர நிதியை விட, இ.டி.எப்., சிறந்தது. வான்கார்டு, அமெரிக்க சந்தையில் ஏற்படுத்திய, இ.டி.எப்., முதலீட்டு புரட்சி வரும் ஆண்டுகளில், நம் நாட்டில் எப்படி வளர்ச்சி காணப் போகிறது என்பதே துறைசார் வல்லுனர்களின் ஆவலான எதிர்பார்ப்பு. குறையும் வட்டி விகிதங்களின் பாதிப்பினால் சிரமப்படும் முதலீட்டாளர்கள், தங்கள் முதலீட்டில் இ.டி.எப்., முறைக்கும் உரிய ஆலோசனை பெற்று இடம் ஒதுக்கலாம். சந்தையில் பங்கேற்க தயங்கும் ஆரம்ப முதலீட்டாளர் களும் இ.டி.எப்., முறையை தேர்வுசெய்து, அவற்றில் தமக்கேற்ற, இ.டி.எப்., திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|